தமிழ்நாடு செய்திகள்

கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க முடிவு- பூண்டி ஏரியில் ஆந்திர அதிகாரிகள் ஆய்வு

Published On 2022-11-04 12:18 IST   |   Update On 2022-11-04 12:18:00 IST
  • பூண்டி ஏரி அருகே நீரியல் ஆய்வுகூடம் உள்ளது.
  • பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 38 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

ஊத்துக்கோட்டை:

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. இந்த ஏரியில் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திரா மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.

கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி.யும், ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி.யும், வருடந்தோறும் பூண்டி ஏரிக்கு திறந்துவிட வேண்டும்.

கடந்த ஜனவரி மாதம் பூண்டி ஏரியில் போதுமான தண்ணீர் இருப்பு இருந்ததால் கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடவில்லை. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வாட்டி எடுத்த வெயிலால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. இதனை கருத்தில் கொண்டு கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடும்படி தமிழக அரசு ஆந்திர அரசுக்கு கோரிக்கை விடுத்தது.

அதனை ஏற்று கண்டலேறு அணையில் இருந்து மே 5-ந் தேதி பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நீர் வரத்தால் பூண்டி ஏரி முழுவதுமாக நிரம்பியதை அடுத்து ஜூலை 19-ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு முழுவதுமாக நிறுத்தப்பட்டது.

பூண்டி ஏரி அருகே நீரியல் ஆய்வுகூடம் உள்ளது. இந்த நீரியல் ஆய்வு கூடத்துக்கு ஏரியில் இருந்து தண்ணீர் செல்லும் மதகு கிணறு சேதமடைந்தி இருந்தது. இந்த மதகு கிணற்றை அகற்றிவிட்டு புதிதாக 3 மதகு கிணறுகளை ரூ. 10 கோடி செலவில் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதேபோல் சேதமடைந்த கிருஷ்ணா கால்வாய் சீரமைப்பு பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதனை கருத்தில் கொண்டு கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின் படி ஜூலையில் கண்டலே அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் பெறவில்லை.

இந்த நிலையில் 68 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட கண்டலேறு அணையில் தற்போது 53. 27 டி. எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. தொடர்ந்து நீர் வரத்தால் கண்டலேறு அணையின் நீர் மட்டம் உயர்ந்து வருவதால் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து வர ஆந்திர அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

எனினும் தற்போது தமிழகத்தில் பலத்த மழை கொட்டி வருவதால் கிருஷ்ணா தண்ணீர் திறப்பு குறித்து ஆந்திர மாநில பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ஒபுல தாஸ், உதவி பொறியாளர்கள் சந்திர மோகன், பெஞ்சலய்யா ஆகியோர் பூண்டி ஏரியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள் கூறும்போது, ஆந்திராவில் பெய்த பலத்த மழைக்கு நீர்வரத்து அதிகமாகியதால் கண்டலேறு அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. தற்போது 53.27 டி. எம். சி. தண்ணீர் இருப்பு உள்ளது. தமிழக அரசு கேட்டுக் கொண்டால் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விட தயாராக உள்ளோம் என்றனர்.

பூண்டி ஏரியில் மேற்கொள்ளப்பட்டுள்ள மதகு கிணறு கிணறுகள் அமைக்கும் பணிகள் மற்றும் கிருஷ்ணா நதி கால்வாய் சீரமைப்பு பணிகள் முடியும் தருவாயில் உள்ளதாகவும், இப்பணிகள் முடிவடைந்த பிறகு கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் பெற திட்டமிட்டுள்ளதாக தமிழக பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ரமேஷ் தெரிவித்தார். அப்போது உதவி பொறியாளர்கள் பழனிகுமார், சதிஷ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3,231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். தற்போது ஏரியின் நீர்மட்டம் 24.90 அடியாகவும், 832 மில்லியன் கன அடி தண்ணீரும் இருப்பு உள்ளது.

பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 38 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

Similar News