சென்னை மெரினா கடற்கரையில் சிறப்பு நடைபாதை வசதி தயார்
- பொதுமக்கள் பயன்பாட்டுக்காக இந்த சிறப்பு நடைபாதை வசதியை திறக்க மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது.
- மாற்றுத் திறனாளிகள், முதியோர்கள் கடல் அழகினை ரசிப்பதற்காக சிறப்பு சக்கர நாற்காலி வண்டி வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
சென்னை:
சென்னை மெரினா கடற்கரை மணல் பரப்பில் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் கடல் அழகை எளிதில் ரசிக்கும் வகையில் மரக்கட்டையிலான சிறப்பு நடைபாதை வசதி சென்னை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டு உள்ளது.
கடற்கரை மணல் பரப்பில் பிரமாண்டமான வகையில் அமைக்கப்பட்ட இந்த நடைபாதையின் வழியாக மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் வீல் சேருடன் சென்று கடல் அழகினை ரசிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
இந்த சிறப்பு நடைபாதை 380 மீட்டர் நீளம், 3 மீட்டர் அகலத்தில் மரக்கட்டையால் அமைக்கப்பட்டு உள்ளது. கடற்கரை சாலை விவேகானந்தர் இல்லம் எதிரே மணல்பரப்பில் மரப் பலகை, மரக்கட்டையால் இந்த சிறப்பு நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது.
ரூ.1கோடி செலவில் இந்த சிறப்பு நடை பாதை உருவாக்கப்பட்டு உள்ளது.
இந்த பணிகள் அனைத்தும் தற்போது நிறைவடைந்து விட்டது. விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக இந்த சிறப்பு நடைபாதை வசதியை திறக்க மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை மாநகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது.மேலும் இந்த நடைபாதை வழியாக செல்லும் மாற்றுத் திறனாளிகள், முதியோர்கள் கடல் அழகினை ரசிப்பதற்காக சிறப்பு சக்கர நாற்காலி வண்டி வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.