பூந்தமல்லி அருகே சாலையில் கழிவுநீர் தேக்கம்- பொதுமக்கள் மறியல்
- நசரத்பேட்டை போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
- கழிவு நீரை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
பூந்தமல்லி:
பூந்தமல்லி அருகே உள்ள நசரத்பேட்டை ஊராட்சிக்குட்பட்ட கண்ணப்பா தெருவில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கழிவுநீர் கால்வாயில் இருந்து வெளியேறி சாலைகளில் குளம் போல் தேங்கி உள்ளது. இதனால் அந்த பகுதி முழுவதும் கழிவு நீரால் சூழப்பட்டுள்ளது.
வீடுகளை விட்டு பொதுமக்கள் வெளியே வர முடியாத நிலை உள்ளது. கடும் துர்நாற்றத்தால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. இது பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அிறந்ததும் நசரத்பேட்டை போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கழிவு நீரை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.