தமிழ்நாடு

2-வது நாளாக விசைதறிகள் வேலை நிறுத்தம்- ரூ.12 கோடி மதிப்பிலான துணி உற்பத்தி பாதிப்பு

Published On 2022-07-04 08:36 GMT   |   Update On 2022-07-04 08:36 GMT
  • ஈரோடு மாவட்டத்தில் 30 ஆயிரம் விசைத்தறிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
  • விசைத்தறிகளின் வேலை நிறுத்த போராட்டம் இன்று 2-வது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது.

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் வீரப்பன்சத்திரம், அசோகபுரம், மாணிக்கம் பாளையம், லக்காபுரம், சித்தோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன.

இந்த விசைத்தறிகளில் காட்டன் துணி, ரயான் துணி உற்பத்தி நடைபெற்று வருகிறது. இதில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் மட்டும் ரயான் துணி உற்பத்தி நடந்து வருகிறது. நாள் ஒன்றுக்கு ரூ.6 கோடி மதிப்புள்ள 24 லட்சம் மீட்டர் ரயான் துணி உற்பத்தி நடந்து வந்தது.

இந்நிலையில் ரயான் துணிகளின் விலை குறைந்துள்ளதால் மார்க்கெட்டில் ரயான் துணி உற்பத்தி செய்த விலையை விட குறைவாக விற்பனை ஆகிறது. இதனால் ரயான் துணி தயாரித்த விசைத்தறியாளர்கள் நஷ்டம் அடைந்து வருகின்றனர். தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு வருவதால் இதனை சமாளிக்கும் வகையில் நேற்று முதல் ஒரு வாரத்திற்கு ரயான் துணி உற்பத்தியை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன்படி ஈரோடு மாவட்டத்தில் 30 ஆயிரம் விசைத்தறிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. விசைத்தறிகளின் வேலை நிறுத்த போராட்டம் இன்று 2-வது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் ரூ.12 கோடி மதிப்புள்ள துணி உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக 1 லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்து உள்ளனர்.

Tags:    

Similar News