தமிழ்நாடு

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் போலீசார் சோதனை செய்து விட்டு வெளியே வந்த போது எடுத்த படம்.


நித்யானந்தா ஆசிரமத்தில் கர்நாடக இளம்பெண்ணை அடைத்து வைத்துள்ளதாக புகார்- போலீசார் அதிரடி சோதனை

Published On 2022-06-27 06:01 GMT   |   Update On 2022-06-27 09:06 GMT
  • திருவண்ணாமலை கிரிவலப்பாதை அடி அண்ணாமலையில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் நாகேஷின் மகள் இருப்பதாக அவருக்கு தகவல் கிடைத்துள்ளது.
  • இதையடுத்து நாகேஷ் திருவண்ணாமலை தாலுகா போலீசில் தனது மகளை மீட்டுத்தருமாறு புகார் செய்தார்.

திருவண்ணாமலை:

பெங்களூர் பகுதியைச் சேர்ந்தவர் நாகேஷ். இவர் தனது மனைவி மற்றும் 2 மகள்களுடன் கடந்த 2017-ம் ஆண்டு முதல் கர்நாடக மாநிலத்தில் பிடதி பகுதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் பல்வேறு சேவைகளை செய்து வந்துள்ளனர். 2019-ம் ஆண்டு நாகேஷ் அவரது மனைவி மற்றும் மூத்த மகள் ஆசிரமத்தில் இருந்து வெளியேறினர்.

2-வது மகள் மட்டும் ஆசிரமத்தில் தங்கி தொடர்ந்து சேவை செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

அவ்வப்போது ஆசிரமத்திற்கு நேரில் சென்று நாகேஷ் அவரது மகளை பார்த்து விட்டு வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் கடந்த சில மாதங்களாக அவரது மகளை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அப்போது பிடதியில் ஆசிரமத்தை தொடர்பு கொண்டு தனது மகளை கண்பிக்குமாறு கேட்டுள்ளார். அந்த சமயத்தில் செல்போன் மூலம் வீடியோ காலில் நாகேஷ் பேசி வந்துள்ளார்.

அதன்பிறகு தனது மகளை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனையடுத்து பிடதி ஆசிரமத்தில் உள்ள தனது மகளை மீட்டுத் தருமாறு கர்நாடக போலீசில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் செய்தார்.

ஆனால் பிடதி ஆசிரமத்தில் இருந்து நாகேஷின் மகள் வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்ததாக நாகேஷுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் அவர் தனது மகளை பல இடங்களில் தேடினார்.

இந்த நிலையில் திருவண்ணாமலை கிரிவலப்பாதை அடி அண்ணாமலையில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் நாகேஷின் மகள் இருப்பதாக அவருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து நாகேஷ் திருவண்ணாமலை தாலுகா போலீசில் தனது மகளை மீட்டுத்தருமாறு புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் நேற்று இரவு தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமாமாலினி தலைமையில் போலீசார் நித்யானந்தா ஆசிரமத்திற்கு நாகேஷ் மற்றும் அவரது மனைவியுடன் நேரில் சென்று சோதனை நடத்தினர். அங்கு அவரது மகள் இல்லை என்பது தெரியவந்தது. இதனால் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

Tags:    

Similar News