குடிபோதையில் பைக் ஓட்டிய போலீஸ்காரருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
- போக்குவரத்து போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
- மதுபோதையில் இருந்த தலைமை காவலர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
நெல்லை:
நெல்லை சந்திப்பு பகுதியில் மாநகர போக்குவரத்து போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விசாரணை நடத்தினர்.
அதில் அவர் பாளை ஆயுதப்படையில் தலைமை காவலராக பணியாற்றி வந்தது தெரியவந்தது. பின்னர் அவரிடம் பைக்கில் வேகமாக வந்தது குறித்து போலீசார் கேட்டறிந்தனர்.
அப்போது மதுபோதையில் இருந்த தலைமை காவலர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றவே பிரச்சினைகளை தடுப்பதற்காக போலீசார் தலைமை காவலரை சந்திப்பு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் மோட்டார் சைக்கிளில் மதுபோதையில் வந்ததற்காக ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
இதற்கிடையே தலைமை காவலர் மருத்துவ விடுப்பில் இருந்து சிகிச்சை பெற்று வருவது தெரியவந்தது. அவர்மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.