தமிழ்நாடு செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 26 ஆயிரம் கனஅடியாக குறைந்தது

Published On 2024-08-06 09:55 IST   |   Update On 2024-08-06 09:55:00 IST
  • 2 அணைகளில் இருந்தும் மொத்தம் 8 ஆயிரத்து 610 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
  • மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து இன்று 8-வது நாளாக 120 அடியில் நீடித்து வருகிறது.

சேலம்:

கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக உபரிநீர் திறக்கப்பட்டு மேட்டூர் அணை 120 அடியை எட்டியது. இந்த நிலையில் தற்போது நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தது.

கிருஷ்ண ராஜசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 123.75அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 16 ஆயிரத்து 400 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரத்து 547 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதே போல் கபினி அணையின் நீர்மட்டம் 83.04 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 8 ஆயிரத்து 547 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 2063 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 2 அணைகளில் இருந்தும் மொத்தம் 8 ஆயிரத்து 610 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து காணப்பட்டது. நேற்று வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் இன்று காலை 26 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இதனால் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரும் வினாடிக்கு 26 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. பவர் ஹவுஸ் வழியாக 21 ஆயிரத்து 500 கனஅடியும், 16 கண் பாலம் வழியாக 4500 கனஅடியும் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து இன்று 8-வது நாளாக 120 அடியில் நீடித்து வருகிறது.

Tags:    

Similar News