தமிழ்நாடு செய்திகள்

மகளுக்கு செய்வினை வைத்ததாக கூறி பெண்ணை அடித்து கொன்றவர் கைது

Published On 2022-10-11 10:54 IST   |   Update On 2022-10-11 10:54:00 IST
  • கடந்த 1 மாதத்திற்கு முன்பு கருப்பையாவின் மகள் திடீரென இறந்து விட்டார்.
  • வழக்குப்பதிவு செய்து கருப்பையாவை கைது செய்தனர்.

சிவகங்கை:

சிவகங்கை அருகே காராம்பட்டியை சேர்ந்தவர் சின்னகண்ணு. இவரது மனைவி (வயது58). இவருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் கருப்பையா (56) என்பவர் குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த 1 மாதத்திற்கு முன்பு கருப்பையாவின் மகள் திடீரென இறந்து விட்டார். இதற்கு லட்சுமி செய்வினை வைத்தது தான் காரணம் என்று கூறி, கருப்பையா லட்சுமியிடம் அடிக்கடி வாக்குவாதம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை லட்சுமி ஆடு மேய்க்க சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார். அவருடன் அதே பகுதியை சேர்ந்த ஆண்டிச்சி என்பவரும் வந்தார். அவர்கள் காராம்பட்டி கண்மாய் கரையில் வந்தபோது கருப்பையா அங்கு வந்தார்.

அவர் லட்சுமியிடம் வாக்குவாதம் செய்தார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த கருப்பையா கடப்பாரையால் லட்சுமியை அடித்துள்ளார். இதில் படுகாயமடைந்த லட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதனை தடுக்க முயன்ற ஆண்டிச்சியையும் கருப்பையா தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த ஆண்டிச்சி சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சிவகங்கை தாலுகா போலீசார் கொலை செய்யப்பட்ட லட்சுமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கருப்பையாவை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால் அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

Similar News