தமிழ்நாடு

கோத்தகிரியில் குட்டிகளுடன் சுற்றித்திரியும் கரடிகள்- கூண்டு வைத்து பிடிக்க வலியுறுத்தல்

Published On 2023-06-19 04:43 GMT   |   Update On 2023-06-19 04:43 GMT
  • கேசலாடா பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் குட்டிகளுடன் கரடி சுற்றி வந்தது.
  • பொதுமக்கள் கூறுகையில், கோத்தகிரியில் கரடிகள் இரவு மட்டுமின்றி பகல் நேரத்திலும் சுற்றி திரிகிறது.

அரவேணு:

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்று வட்டார பகுதியில் சமீபகாலமாக கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. அவை உணவு தேடி குடியிருப்பு பகுதிக்கு வருவது தொடர்கதையாக உள்ளது.

இந்தநிலையில் கோத்தகிரி அடுத்த கேசலாடா பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் குட்டிகளுடன் கரடி சுற்றி வந்தது.

இதனை பார்த்த தேயிலை தொழிலாளர்கள் அச்சம் அடைந்தனர். இதனால் அவர்கள் சத்தம் போடவே, அந்த கரடிகள் தேயிலை தோட்டம் வழியாக காட்டுக்குள் சென்று விட்டன. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கோத்தகிரியில் கரடிகள் இரவு மட்டுமின்றி பகல் நேரத்திலும் சுற்றி திரிகிறது.

அதிலும் ஒருசில கரடிகள் குட்டிகளுடன் நடமாடி வருகின்றன. இதனை விரட்ட முயன்றால் கடிக்க வருகிறது. ஒருசில நேரங்களில் விளைநிலங்களில் புகுந்து நாசப்படுத்துகிறது. வீடுகளை சுற்றி வந்து உணவு தேடி நோட்டம் பார்த்து நிற்கிறது.

இதனால் நாங்கள் கூலி வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டில் முடங்க வேண்டி உள்ளது. எனவே கேசலாடா குடியிருப்பு மற்றும் தேயிலை தோட்டங்களில் உலா வரும் கரடிகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த காட்டில் விட வேண்டும் என்று கோரிக்கை வைத்து உள்ளனர்.

Tags:    

Similar News