தமிழ்நாடு செய்திகள்

தமிழகம் முழுவதும் நூற்பாலைகள் 'ஸ்டிரைக்'- 10 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழப்பு

Published On 2023-07-15 13:39 IST   |   Update On 2023-07-15 13:39:00 IST
  • நஷ்டத்தை தவிர்க்க மத்திய அரசு பஞ்சின் மீதான 11 சதவீத இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும்.
  • தமிழகம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட நூற்பாலைகள் பங்கேற்றுள்ளன.

திருப்பூர்:

திருப்பூர், கோவை மாவட்டத்தில் நூற்பாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு பஞ்சில் இருந்து உற்பத்தி செய்யும் ஓ.இ. மில்கள் செயல்படுகின்றது. திருப்பூர் மட்டுமின்றி கரூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இயங்கி வருகின்றது. இந்த மில்களில் தினந்தோறும் 1,400 டன் அளவுக்கு கலர் மற்றும் கிரே நூல் உற்பத்தி செய்யப்படுகின்றது.

இந்தநிலையில் மின் கட்டண உயர்வு மற்றும் உற்பத்தி செய்யும் நூலுக்கு உரிய விலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 5-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் திருப்பூர், கோவை உள்பட தமிழகம் முழுவதும் சிறுகுறு மற்றும் நடுத்தர நூற்பாலைகள் இன்று முதல் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நாள் ஒன்றுக்கு ரூ.85 கோடி வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

இதுகுறித்து தென்னிந்திய நூற்பாலைகளின் கூட்டமைப்பு (சிஸ்பா) கவுரவ செயலாளர் ஜெகதீஸ் சந்திரன் கூறியதாவது:-

கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் நூல் மற்றும் துணி வகைகளின் ஏற்றுமதி 28 சதவீதம் வரை குறைந்துள்ளது. தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி சங்க வழிகாட்டுதல்படி குறைந்தபட்சம் பஞ்சிலிருந்து நூல் மாற்றத்துக்கான விலை கிலோவுக்கு ரூ.2 ஆக இருக்க வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் ஒரு ரூபாயே கிடைக்கிறது. இதனால் கிலோவுக்கு 40 ரூபாய் வரை நஷ்டம் ஏற்படுகிறது. 10 ஆயிரம் ஸ்பின்டில்கள் கொண்ட ஆலைக்கு தினமும் ஒரு லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்படுகிறது.

இதனால் வங்கி கடன் திருப்பி செலுத்துதல், பஞ்சு கொள்முதல் பணம் செலுத்துதல், மின் கட்டணம், ஜி.எஸ்.டி. இ.எஸ்.ஐ. பி.எப். போன்ற செலவினங்களை செலுத்த முடியாத நிலை உள்ளது. இதே நிலை நீடித்தால் நூற்பாலைகள் விரைவில் நிரந்தரமாக மூடும் நிலைக்கு செல்லும்.

நஷ்டத்தை தவிர்க்க மத்திய அரசு பஞ்சின் மீதான 11 சதவீத இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும். வங்கிக்கடன் வட்டி விகிதங்களை பழைய நிலையான 7.5 சதவீதம் அளவுக்கு குறைக்க வேண்டும். ஜவுளி நூற்புத் தொழிலுக்கு ஒரே நாடு ஒரே கொள்கையை மத்திய அரசு உடனடியாக உருவாக்க வேண்டும்.

நூல் துணி வகைகள் ஏற்றுமதிக்கு மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அந்நிய நூல் துணி வகைகள் இறக்குமதியை தடுக்க வேண்டும். தமிழக அரசு 2022ல் உயர்த்திய மின்கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும். மின் பயன்பாட்டுக்கேற்ப அதிகபட்ச தேவை கட்டணத்தை பதிவுநிலை கட்டணமாக வசூலிக்க வேண்டும். பல்வேறு கோரிக்கைகள் மத்திய மாநில அரசுகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

எங்களது கோரிக்கைகளை பரிசீலித்து நூற்பாலை தொழிலை மீட்டெடுக்க வேண்டும். நூற்பாலைத் தொழில் நஷ்டத்தை சந்தித்து வருவதால் இன்று முதல் நூல் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுத்த போராட்டத்தில் சிறு குறு மற்றும் நடுத்தர நூற்பாலைகள் தொடங்கி உள்ளன.

இதில் தமிழகம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட நூற்பாலைகள் பங்கேற்றுள்ளன. இதன் வாயிலாக நாள் ஒன்றுக்கு 35 லட்சம் கிலோ நூல் உற்பத்தி நிறுத்தம் ஏற்படும். நாள் ஒன்றுக்கு ரூ.85 கோடி வருவாய் இழப்பு ஏற்படும். 10 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News