தமிழ்நாடு செய்திகள்

சிறுவன் தலையில் மாட்டிக்கொண்ட எவர்சில்வர் பாத்திரம்- தீயணைப்பு துறையினர் உதவியுடன் வெட்டி அகற்றம்

Published On 2023-08-01 15:30 IST   |   Update On 2023-08-01 15:30:00 IST
  • பாத்திரம் தலையில் வசமாக மாட்டிக்கொண்ட நிலையில் அதனை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
  • அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர், பாத்திரத்தை எடுக்க கடுமையாக முயற்சித்துள்ளனர்.

நெல்லை:

நெல்லை கங்கைகொண்டானை அடுத்த அணைத்தலையூர் கிராமத்தை சேர்ந்தவர் மிக்கேல் ராஜ். இவரது மகன் சேவியர் (வயது 4).

சிறுவன் வழக்கம்போல நேற்று இரவு வீட்டில் உள்ள பொருட்களை வைத்து விளையாடி கொண்டிருந்தபோது ஒரு எவர்சில்வர் பாத்திரத்தை எடுத்து தலையில் மாட்டியுள்ளார்.

அந்த பாத்திரம் தலையில் வசமாக மாட்டிக்கொண்ட நிலையில் அதனை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சிறுவன் அலறல் சத்தம் போட்டான். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர், பாத்திரத்தை எடுக்க கடுமையாக முயற்சித்துள்ளனர். பாத்திரத்தை எடுக்க பலரும் போராடிய நிலையிலும் அதனை அகற்ற முடியாத நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் சிறுவனை நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்குள்ள மருத்துவர்கள் தகவல் அளித்ததன் அடிப்படையில் மருத்துவமனைக்கு சென்ற பாளை தீயணைப்பு நிலைய வீரர்கள் அவர்களிடம் இருந்த பிரத்யேக கருவிகளை கொண்டு பாத்திரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.

இதனைத்தொடர்ந்து சிறுவனுக்கு கூடுதல் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறுவனின் தலையில் சிக்கிய பாத்திரத்தை பல கட்ட போராட்டத்திற்கு பிறகு அகற்றப்பட்ட சம்பவத்தால் அரசு மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News