தமிழ்நாடு

வந்தவாசி அருகே 10-ம் வகுப்பு மாணவி கொலை: வாலிபர் வெறிச்செயல்

Published On 2023-09-25 05:54 GMT   |   Update On 2023-09-25 07:17 GMT
  • நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்ற ரேணுகா வீடு திரும்பவில்லை.
  • ரேணுகாவை யோகேஸ்வரன் கடந்த 6 மாதமாக காதலித்து வந்துள்ளார்.

வந்தவாசி:

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள சென்னாவரம் பாரதியார் நகரை சேர்ந்தவர் மாரி. இவருடைய மகள் ரேணுகா (வயது 14). வந்தவாசி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

அதே பகுதியைச் சேர்ந்தவர் நீலமேகம் என்பவரது மகன் யோகேஸ்வரன் ( 21). மோட்டார் சைக்கிள் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். ரேணுகா யோகேஸ்வரன் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்ற ரேணுகா வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனாலும் அவர் கிடைக்கவில்லை.

இதுகுறித்து வந்தவாசி போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர்.

செல்போன் மூலம் துப்பு துலக்கியதில் கடைசியாக ரேணுகா யோகேஸ்வரனிடம் பேசியது தெரியவந்தது. இதை தொடர்ந்து நேற்று இரவு யோகேஸ்வரனை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் ரேணுகாவை கொலை செய்து விட்டதாக யோகேஷ்வரன் திடுக்கிடும் தகவல் அளித்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் யோகேஸ்வரனை அழைத்து கொண்டு சென்னாவரம் கிராமத்திற்கு வந்தனர்.

அங்குள்ள முள் புதரில் ரேணுகா பிணமாக கிடந்தார். போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து யோகேஸ்வரனை கைது செய்தனர்.

ரேணுகாவை யோகேஸ்வரன் கடந்த 6 மாதமாக காதலித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் தனிமையில் சென்ற மாணவியை யோகேஸ்வரன் மடக்கி பேசினார். அப்போது ஏற்பட்ட தகராறில் யோகேஸ்வரன் ரேணுகாவை தாக்கியுள்ளார் .மேலும் அவரது சுடிதார் துப்பட்டாவை எடுத்து கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News