தமிழ்நாடு

கடலூர் திருவந்திபுரம் கோவிலில் 8 ஜோடிகளுக்கு இலவச திருமணம்- இந்து அறநிலையத்துறை ஏற்பாடு

Published On 2022-12-04 10:22 GMT   |   Update On 2022-12-04 10:22 GMT
  • வேதமந்திரம் முழங்க, மங்கள இசையுடன் 8 திருமண ஜோடிகளும் மணமகள் கழுத்தில் மணமகன் மாங்கல்யத்தை கட்டி திருமணம் செய்து கொண்டனர்.
  • எட்டு திருமண ஜோடிகளுக்கும் தலா 2 கிராம் மாங்கல்யம், மெட்டி, புத்தாடை, மணமாலை ஆகியன இந்து சமய அறநிலையத்துறையினர் வழங்கினர்.

கடலூர்:

கடலூர் அருகே திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் 108 திவ்ய தலங்களில் முதன்மையானதாகும். இக்கோவிலில் சுபமுகூர்த்த தினங்களில் 100 முதல் 300 வரையிலான திருமண விழாக்கள் நடைபெறுவது வழக்கம்.

கடலூர், விழுப்புரம், புதுச்சேரியைச் சேர்ந்த மக்கள் தங்களின் நேர்த்தி கடனை செலுத்தும் விதமாக திருவந்திபுரம் கோவிலில் திருமணம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இன்று திருவந்திபுரம் தேவநாத சுவாமி தேவஸ்தானத்தில் வறுமைக் கோட்டிற்குகீழ் வாழும் குடும்பங்களைச் சேர்ந்த 8 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்யப்பட்டது. கோவில் எதிரில் உள்ள மலையில் உள்ள திருமண மண்டபத்தில் இன்று காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள்ளான முகூர்த்த நேரத்தில் திருமண விழா சிறப்பாக நடந்தது.

திருமணத்தையொட்டி மண்டபத்தில் வாழை மரங்கள், தோரணங்கள் கட்டப்பட்டு இருந்தது. எட்டு திருமண ஜோடிகளும் அலங்கரிக்கப்பட்டு மணமேடைக்கு அழைத்து வரப்பட்டனர்.

திருமண விழா இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் (பொறுப்பு) ஜோதி தலைமையிலும், உதவி ஆணையர் சந்திரன், செயல் அலுவலர்கள் வெங்கடகிருஷ்ணன், சிவக்குமார் ஆகியோர் முன்னிலையில் திருமண ஜோடிகளுக்கு வரவேற்பு வழங்கப்பட்டது. பின்னர் எட்டு திருமண ஜோடிகளுக்கும் தலா 2 கிராம் மாங்கல்யம், மெட்டி, புத்தாடை, மணமாலை ஆகியன இந்து சமய அறநிலையத்துறையினர் வழங்கினர்.

இதையடுத்து வேதமந்திரம் முழங்க, மங்கள இசையுடன் 8 திருமண ஜோடிகளும் மணமகள் கழுத்தில் மணமகன் மாங்கல்யத்தை கட்டி திருமணம் செய்து கொண்டனர். அப்போது இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் திருமண ஜோடிகளின் உறவினர்கள் மணமகிழ்வுடன் அச்சதை தூவி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

திருமணம் முடிந்தவுடன் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் எட்டு திருமண ஜோடிகளுக்கும் காமாட்சி அம்மன் விளக்கு, பித்தளை தாம்புலத்தட்டு, 2 குத்துவிளக்கு, பஞ்சபாத்திரம், சில்வர் பாத்திரங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், தலையணை, பெட்ஷீட் ஆகியனவற்றை சீர்வரிசையாக வழங்கினர். இதனை மணமக்கள் மணமகிழ்வுடன் பெற்றுக் கொண்டனர்.

Tags:    

Similar News