தமிழ்நாடு செய்திகள்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு- சி.பி.சி.ஐ.டி போலீசில் 6 பேர் ஆஜர்

Published On 2023-02-07 14:30 IST   |   Update On 2023-02-07 15:48:00 IST
  • கொடநாடு வழக்கு தொடர்பான விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
  • கொடநாடு வழக்கு சம்பந்தமாக சி.பி.சி.ஐ.டி போலீசார் மீண்டும் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளதால் வழக்கானது சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

கோவை:

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் உள்ளது. இங்கு கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது.

இதுதொடர்பாக சயான், வாளையாறு மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் தற்போது ஜாமீனில் உள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது.

சி.பி.சி.ஐ.டி போலீசார் இந்த வழக்கு தொடர்பாக பலரிடம் விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக மணிகண்டன், கர்சன் செல்வம் மற்றும் ஜெயசீலன் ஆகிய 3 பேருக்கு சில நாட்களுக்கு முன்பு சம்மன் அனுப்பினர். இன்று விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பி இருந்தனர்.

அதனை ஏற்று இன்று 3 பேரும் கோவை காந்தி புரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஆஜராகினர். அவர்களிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அவர்களிடம் கொடநாடு கொலை, கொள்ளை சம்பந்தமாக பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் கொடநாடு வழக்கு சம்பந்தமான ஆவணங்களை மலையாள மொழியில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்ப்பது சம்பந்தமாகவும், வழக்கு குறித்தும் விசாரித்தனர்.

இவர்கள் 3 பேர் தவிர கொடநாடு எஸ்டேட்டில் பணியாற்றிய கிருஷ்ணமூர்த்தி மற்றும் ராஜேஷ், வினோத் ஆகிய 3 பேரும் இன்று சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜராகினர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

கொடநாடு வழக்கு சம்பந்தமாக சி.பி.சி.ஐ.டி போலீசார் மீண்டும் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளதால் வழக்கானது சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

Tags:    

Similar News