தமிழ்நாடு

மேலும் 7 மாணவிகள் பாலியல் புகார்- போக்சோ வழக்கில் சிக்கிய அரசு பள்ளி ஆசிரியர் 'சஸ்பெண்டு'

Published On 2023-08-11 06:11 GMT   |   Update On 2023-08-11 06:11 GMT
  • மாணவிகள் மற்றும் பெற்றோர் போராட்டம் நடத்துவதை அறிந்த ஆசிரியர் பள்ளிக்கு வராமல் தலைமறைவானார்.
  • கைது செய்யப்பட்ட பச்சப்பூராஜா மீது கன்னியாகுமரி மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

நாகர்கோவில்:

கன்னியாகுமரி அருகே மகாராஜபுரம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்த மாணவி ஒருவருக்கு ஆசிரியர் ஒருவர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறினார்.

இந்த நிலையில் நேற்று மாணவியின் பெற்றோர் பள்ளிக்கு வந்தனர். பள்ளியை முற்றுகையிட்டு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் தெரிந்ததும் கன்னியாகுமரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது நெல்லை மாவட்டம் கூடங்குளம் மாடித்தோட்டம் பகுதியை சேர்ந்த பச்சப்பூராஜா (41) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். மாணவிகள் மற்றும் பெற்றோர் போராட்டம் நடத்துவதை அறிந்த ஆசிரியர் பள்ளிக்கு வராமல் தலைமறைவானார்.

இதையடுத்து போலீசார் அவரை பிடித்தனர். பிடிபட்ட அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதற்கிடையில் ஆசிரியரால் பாதிக்கப்பட்ட மேலும் 7 மாணவிகள் புகார் அளித்தனர். இது போலீசாருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியது. புகாரில் ஆசிரியர் வகுப்பறையில் தங்களிடம் அத்துமீறி நடந்து கொண்டதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.

ஆசிரியர் பச்சப்பூராஜா மீது அடுக்கடுக்கான புகார்களை மாணவிகள் தெரிவித்ததையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பச்சப்பூராஜா மீது கன்னியாகுமரி மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

பின்னர் ஆசிரியர் பச்சப்பூராஜாவை ஆசாரி பள்ளம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனைக்கு அனுமதித்தனர். இதைத்தொடர்ந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப் பட்ட அவர் நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

அரசு பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டதையடுத்து அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டது. இதையடுத்து ஆசிரியர் பச்சப்பூராஜாவை சஸ்பெண்டு செய்து கல்வி அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

Tags:    

Similar News