தமிழ்நாடு

வாலிபர்களை யானை விரட்டியதை காணலாம்.

வீடியோ எடுக்க முயன்றபோது வாலிபர்களை விரட்டிய யானை: உடுமலை-மூணாறு சாலையில் பரபரப்பு

Published On 2022-11-28 04:48 GMT   |   Update On 2022-11-28 04:48 GMT
  • வனப்பகுதியில் வசிக்கும் வன விலங்குகள் தாகம் தீர்ப்பதற்காக அமராவதி அணையை நோக்கி வருவது வழக்கம்.
  • வனவிலங்குகளிடம் அத்துமீறும் நபர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, செந்நாய், காட்டெருமை, மலைப்பாம்பு, சிங்கவால்குரங்கு உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

வனப்பகுதியில் வசிக்கும் வன விலங்குகள் தாகம் தீர்ப்பதற்காக அமராவதி அணையை நோக்கி வருவது வழக்கம். இந்த நிலையில் உடுமலை-மூணாறு சாலை வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர்கள் 2 பேர் சாலையை கடக்க முயன்ற யானையை செல்போனில் புகைப்படம்-வீடியோ எடுக்க முயன்றனர்.

அப்போது ஆக்ரோஷமடைந்த யானை அவர்களை விரட்டியது. இதில் அதிர்ஷ்டவசமாக 2 பேரும் யானையிடம் இருந்து உயிர் தப்பினர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

உடுமலை-மூணாறு சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சாலையில் வனவிலங்குகள் நடமாட்டம் இருந்தால் அவை சாலையைக் கடக்கும் வரையில் பொறுமை காத்து செல்ல வேண்டும். வனவிலங்குகளை துன்புறுத்துவது அவை மிரட்சி அடையும் வகையில் கற்களை வீசி தாக்குவது, ஒலி எழுப்புவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடக்கூடாது. வனவிலங்குகளிடம் அத்துமீறும் நபர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News