தமிழ்நாடு செய்திகள்
ஆரணியில் வெறிநாய் கடித்து சிறுவன் உள்பட 12 பேர் படுகாயம்
- வெறி பிடித்த நாய் இன்று சாலையில் சென்றவர்களை விரட்டி விரட்டி கடித்து தாக்கியது.
- காயமடைந்த 12 பேரும் ஆரணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆரணி:
ஆரணி அருகே மேல்சீசமங்கலம் கிராமம் உள்ளது. இங்கு ஏராளமான நாய்கள் தெருவில் சுற்றிதிரிகின்றன. இதில் ஒரு நாய் வெறிபிடித்த நிலையில் தெருவில் பைக் மற்றும் நடந்து செல்பவர்களை பார்த்து குரைத்து வந்தது.
இந்நிலையில் வெறி பிடித்த நாய் இன்று சாலையில் சென்றவர்களை விரட்டி விரட்டி கடித்து தாக்கியது.
இதில் ஒரு சிறுவன், 5 பெண்கள் உள்பட 12 பேர் படுகாயமடைந்தனர். மேலும் அந்த நாய் 4 மாடுகளையும் கடித்து குதறியது.
இதனால் ரோட்டில் செல்பவர்கள் அச்சமடைந்து பீதியுடன் சென்றனர். காயமடைந்த 12 பேரும் ஆரணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தநிலையில் அப்பகுதி கிராம மக்கள் வெறி நாயை துரத்தி சென்று கல் மற்றும் கம்பால் தாக்கி அடித்து கொன்றனர்.
இறந்த நாயை அப்பகுதியில் உள்ள சுடுகாட்டில் கொண்டு சென்று புதைத்தனர்.