தமிழ்நாடு

மதுராந்தகம் அருகே சென்னை ஆம்னி பஸ் மரத்தில் மோதியது; 10 பயணிகள் காயம்

Published On 2023-08-10 06:04 GMT   |   Update On 2023-08-10 06:04 GMT
  • விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
  • படாளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுராந்தகம்:

கோயம்புத்தூரில் இருந்து சென்னை நோக்கி தனியார் ஆம்னிபஸ் இன்று காலை வந்து கொண்டு இருந்தது. சுமார் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

இன்று காலை 6.15 மணியளவில் மதுராந்தகம் அருகே மாமண்டூர் என்னும் இடத்தில் ஆம்னி பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

அந்த பஸ் சாலையை விட்டு இறங்கி அங்கிருந்த மரத்தில் மோதி நின்றது. இதில் பஸ்சின் முன்பகுதி நொறுங்கியது.

பஸ்சில் இருந்த 10 பயணிகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்களை அவ்வழியே வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து படாளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News