தமிழ்நாடு செய்திகள்

சென்னையில் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தும் பர்மா ஆசிரியை

Published On 2023-09-14 15:40 IST   |   Update On 2023-09-14 15:40:00 IST
  • நான் பர்மாவில் வாழ்ந்தபோது இந்தியரை திருமணம் செய்து கொண்டேன்.
  • சேலையை பெற்றுக்கொண்ட அவர் எனக்கு இன்று கடவுள் கொடுத்தது இது என்று சிரித்தார்.

சென்னை அடையார் பகுதியில் 81 வயது நிரம்பிய ஒரு பெண் பிச்சை எடுத்து சாப்பிடுவதையும் அவர் ஆங்கிலத்தில் சரளமாக பேசுவதையும் பார்த்த ஒருவர் அவருடன் உரையாடிய வீடியோ காட்சியை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:-

எனது பெயர் மெர்லின் (வயது 81). பர்மாவில் உள்ள ரங்கூனில் பிறந்த நான் அங்கு ஆசிரியராக பணியாற்றினேன். குழந்தைகளுக்கு நான் டியூசன் எடுப்பேன். ஆங்கிலம், கணிதம் பாடங்கள் எனக்கு நன்றாக தெரியும். தமிழ் ஓரளவுக்கு தெரியும்.

நான் பர்மாவில் வாழ்ந்தபோது இந்தியரை திருமணம் செய்து கொண்டேன். கிறிஸ்தவ ஆலயத்தில் தான் எங்களது திருமணம் நடைபெற்றது. குழந்தைகளும் இருந்தன. ஆனால் இப்போது கணவர் மற்றும் குழந்தைகள் எல்லோரும் இறந்து விட்டனர். ஒருத்தர் கூட இல்லை. இதனால் எனது தேவையை நானே பூர்த்தி செய்து கொள்கிறேன்.

வயிற்றை நிரப்ப வேண்டும் அல்லவா! வேறு வழியில்லையே, அதனால் சென்னை வந்து அடையார் பகுதியில் பிச்சை எடுத்து வாழ்கிறேன் என்று கூறினார். உங்களுக்கு எதுவும் தேவை உள்ளதா? என்று அவருடன் உரையாடியவர் கேட்க, எதுவும் எனக்கு வேண்டாம் என்றார். ஒரு சேலை, ஒரு சட்டை மட்டும் தான் என்னிடம் உள்ளது என்று அவர் கூறியபோது உங்களுக்கு ஒரு புதுச்சேலை நான் வாங்கி வந்துள்ளேன். இந்தாருங்கள் என்று அவரிடம் அதை அவர் வழங்கினார்.

அந்த சேலையை பெற்றுக்கொண்ட அவர் எனக்கு இன்று கடவுள் கொடுத்தது இது என்று சிரித்தார். இதை தொடர்ந்து அவருடன் உரையாடிய அந்த வாலிபர் உங்களின் ஆங்கில உரையாடல் வீடியோ எடுத்து நான் தொடர்ந்து வெளியிடுகிறேன். அதற்கான தொகையை உங்களுக்கு தருகிறேன் என்று கூறி பேட்டியை முடித்துக்கொண்டார்.

இந்த பெண்ணின் உரையாடல் வீடியோவுக்கு சமூக வலைத்தளத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வீடியோ தொடர்ந்து வைரல் ஆகி வருகிறது.

Tags:    

Similar News