தமிழ்நாடு

தாய், மகன் தற்கொலை செய்து இறந்த நிலையில் எலி பேஸ்டை தின்ற மருமகளும் உயிரிழப்பு

Published On 2023-09-07 06:08 GMT   |   Update On 2023-09-07 06:08 GMT
  • நிலம் விற்பது தொடர்பாக தாய், மகன் இருவருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
  • ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரும் தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே மணல்மேடு பகுதியை சேர்ந்தவர் பாவாயி (75). இவரது மகன் ராசு (55). விவசாயி. இவரது மனைவி சாந்தி (50).

நிலம் விற்பது தொடர்பாக தாய், மகன் இருவருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பாவாயி மிகுந்த மன வருத்தத்தில் இருந்துள்ளார்.

இதன் காரணமாக கடந்த 4-ந் தேதி இரவு வீட்டில் தனியாக இருந்த பாவாயி தனது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தாய் தற்கொலை செய்து கொண்டதை பார்த்த அவரது மகன் ராசுவும் வீட்டில் இருந்த விஷத்தை சாப்பிட்டு உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார்.

இதனை பார்த்த ராசுவின் மனைவி சாந்தியும் வீட்டில் இருந்த எலி பேஸ்டை தின்றுள்ளார். இதனால் வயிறு எரிச்சல் ஏற்படவே சத்தம் போட்டுள்ளார். சாந்தியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர்.

அப்போது அங்கு பாவாயி தூக்கில் தொங்கிய நிலையிலும், ராசு வாயில் நுரை தள்ளிய நிலையிலும் இறந்து கிடந்தனர். எலி பேஸ்ட் சாப்பிட்ட சாந்தி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதையடுத்து உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சாந்தியை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சாந்திக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி சாந்தியும் உயிரிழந்தார். இதுகுறித்து ஜேடர்பாளையம் இன்ஸ்பெக்டர் ரவி வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரும் தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News