தமிழ்நாடு செய்திகள்

சீர்காழி அருகே நள்ளிரவில் மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதி தந்தை-மகன் உள்பட 4 பேர் பலி 26 பேர் படுகாயம்

Published On 2023-05-12 10:11 IST   |   Update On 2023-05-12 10:11:00 IST
TNJ0112052023: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இருந்து சென்னைக்கு நேற்று நள்ளிரவு ஒரு அரசு சொகுசு பஸ் புறப்பட்டது. பஸ்சில் 43 பயணிகள் இருந்தனர். பஸ்சை பழனி அமரபூண்டி பகுதியை சேர்ந்த பிரதாப் (வயது 38) என்பவர் ஒட்டி சென்றார்.திருவண்ணாமலையை சேர்ந்த விஜயசாரதி நட

சீர்காழி:

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இருந்து சென்னைக்கு நேற்று நள்ளிரவு ஒரு அரசு சொகுசு பஸ் புறப்பட்டது. பஸ்சில் 43 பயணிகள் இருந்தனர். பஸ்சை பழனி அமரபூண்டி பகுதியை சேர்ந்த பிரதாப் (வயது 38) என்பவர் ஓட்டி சென்றார். திருவண்ணாமலையை சேர்ந்த விஜயசாரதி நடத்துனராக பணியாற்றினார்.

அந்த பஸ் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புறவழிச்சாலையில் பாதரகுடி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்து கொண்டிருந்தனர். அவர்கள் மீது மோதாமல் இருக்க டிரைவர் பஸ்சை சாலையோரம் கொண்டு சென்றுள்ளார்.

அப்போது சாலையோரம் நின்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது அரசு பஸ் அதிவேமாக மோதி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் பஸ்சில் இருந்த நடத்துனர் விஜயசாரதி உள்பட 26 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சீர்காழி போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த 26 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி விஜயபாரதி பரிதாபமாக இறந்தார். இதனால் இந்த விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்தது. இறந்தவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

விசாரணையில் விபத்தில் இறந்தவர்கள் சிதம்பரம் எம்.கே.தோட்டம் முருகன் கோவில் தெருவை சேர்ந்த பாலமுருகன் (வயது 39), கடலூர் சேத்தியாதோப்பு வெய்யலூரை சேர்ந்த பத்மநாபன் (35), அருள் ராஜ் (16) என்பது தெரியவந்தது. இதில் பத்மநாபன், அருள்ராஜ் தந்தை-மகன். இவர்கள் அனைவரும் கோவிலில் கச்சேரி நிகழ்ச்சி செய்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விபத்து குறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா சம்பவ இடத்தில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதுடன் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

விபத்தில் சிக்கிய டேங்கர் லாரியில் இருந்து குருடு ஆயில் கசிந்து வருவதால் பாதுகாப்பு நடவடிக்கையாக 2 தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் மாற்றுச்சாலை வழியாக வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

Similar News