தமிழ்நாடு

திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் 6 பேர் ரஷியா விண்வெளி மையம் செல்கிறார்கள்

Published On 2023-04-17 06:48 GMT   |   Update On 2023-04-17 06:48 GMT
  • தமிழகத்தில் உள்ள 56 அரசு பள்ளிகளைச் சேர்ந்த 500 மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
  • மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் நேரில் அழைத்து பாராட்டினார்.

திருவள்ளூர்:

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாணவர்களின் திறமைகளை வெளிக் கொணர வேண்டும் என்பதற்காகவும், அவர்களின் அறிவுத் திறனை உலகறியச் செய்ய வேண்டும் என்பதற்காகவும் ராக்கெட் அறிவியல் என்ற தலைப்பில் ஆன்லைன் பயிற்சி திட்டம் கடந்த ஆண்டு நடத்தப்பட்டது. விஞ்ஞானி சிவதாணுப்பிள்ளை தலைமையில் நடந்தப்பட்ட இந்த பயிற்சி வகுப்பிற்கு தமிழகத்தில் உள்ள 56 அரசு பள்ளிகளைச் சேர்ந்த 500 மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

3 கட்ட பயிற்சிக்கு பின்னர் இறுதியாக 50 பேர் வருகிற ஜூன் மாதம் ரஷ்யா நாட்டில் உள்ள யூரி ககாரின் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

இதில் திருவள்ளூர் மாவட்டத்தில் 6 மாணவ-மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

திருப்பாச்சூரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவி பி.இவாஞ்சிலின், புழலில் உள்ள பொப்பிலிராஜா மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 11-ம் வகுப்பி மாணவி கீர்த்திகா, குமரவேல், கதிர்வேடு கிராமத்தைச் சேர்ந்த அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு பிடிக்கும் ரூபேஷ், செங்குன்றம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் ரேஷ்மா, ஜீவிதா ஆகியோர் தேர்வாகி இருக்கின்றனர்.

இந்நிலையில் ரஷ்யா செல்ல தேர்வான அரசு பள்ளி மாணவ-மாணவிகள் 6 பேரையும் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் நேரில் அழைத்து பாராட்டினார். அப்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.இராமன், திருப்பாச்சூர் அரசு உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தாமோதரன்,ஆசிரியை ஜெகதீஸ்வரி, முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பூபாலமுருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News