தமிழ்நாடு
மைத்துனரை வெட்ட நடுரோட்டில் அரிவாளுடன் துரத்தி சென்ற பரபரப்பு காட்சி.

மனைவியுடன் கள்ளத்தொடர்பு- மைத்துனரை அரிவாளால் வெட்ட ஓட ஓட துரத்தி சென்ற வாலிபர்

Published On 2022-04-22 09:45 GMT   |   Update On 2022-04-22 09:45 GMT
தங்கை இறந்த நிலையில் தனது மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த மைத்துனரை அரிவாளால் வெட்ட ஓட ஓட துரத்தி சென்ற வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி:

திருச்சி திருவானைக்காவல் பகுதியை சேர்ந்தவர் சந்துரு. இவரது மனைவி சத்யா. இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். சந்துரு தனது தங்கை விஜயலட்சுமியை அதே பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார்.

சிவக்குமாரும், விஜயலட்சுமியும் தனிக்குடித்தனம் நடத்தி வந்த நிலையில் திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு விஜயலட்சுமி இறந்து விட்டார். இந்த நிலையில் சிவக்குமாருக்கும், சந்துருவின் மனைவி சத்யாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அதுவே கள்ளக்காதலாக மாறியது.

இதன் காரணமாக சத்யா கணவரை பிரிந்து, தனது மகனை அழைத்துக்கொண்டு சிவக்குமாருடன் சென்று குடும்பம் நடத்தி வந்தார். கடந்த 2 ஆண்டுகளாக அவர் சிவக்குமாருடன் வாழ்ந்து வருகிறார். பல நாட்களாக சத்யாவை கண்டித்து தன்னுடன் வந்துவிடுமாறு சந்துரு கூறினாலும் அதனை சத்யா கண்டுகொள்ளவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த சந்துரு இன்று காலை அரிவாளுடன் சென்று சிவக்குமாரை வெட்ட முயன்றார். ஆனால் சிவக்குமார் தப்பி ஓடினார். ஆனாலும் சந்துரு அரிவாளுடன் திருவானைக்காவல் மேம்பாலம் பகுதியில் வெட்டுவதற்காக துரத்திக் கொண்டே சென்றார்.

அப்போது அந்த மேம்பாலத்தில் தொடர்ந்து வாகனங்கள் சென்ற வண்ணம் இருந்தன. அரிவாளுடன் சென்றவரை பிடிக்கவும், உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஓடியவரை காப்பாற்றவும் யாரும் முன்வரவில்லை. பின்னர் அவருக்கு அரிவாள் வெட்டும் விழுந்தது.

இதில் லேசான காயங்களுடன் சிவக்குமார் தப்பிச்சென்றார். தகவல் அறிந்து அங்கு சென்ற ஸ்ரீரங்கம் போலீசார் சிவக்குமாரை காப்பாற்றி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் ஏற்கனவே சந்துரு மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. பட்டப்பகலில் திருச்சியில் அரிவாளுடன் ஒருவரை துரத்திச்சென்ற காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News