தமிழ்நாடு செய்திகள்
வாலிபரை விரட்டிய யானை

தலமலை வனப்பகுதியில் பரபரப்பு- செல்போனில் வீடியோ எடுத்த வாலிபரை விரட்டிய யானை

Published On 2022-02-25 09:36 IST   |   Update On 2022-02-25 09:36:00 IST
சத்தியமங்கலம் அடுத்த தலமலை வனச்சாலையில் கூட்டமாக சாலையை கடந்த யானைகளை செல்போனில் வீடியோ எடுத்து கொண்டிருந்த வாகன ஓட்டி ஒருவரை புதர் மறைவில் மறைந்திருந்த யானை திடீரென துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. இவை அவ்வப்போது உணவு மற்றும் குடிநீர் தேடி சாலையோரம் நடமாடுவதும் குட்டிகளுடன் சாலையைக் கடப்பதும் வாடிக்கையாகி வருகின்றன.

இந்நிலையில் திம்பம் வனச்சோதனைச் சாவடியில் இருந்து தலமலை செல்லும் சாலையில் உள்ள நெய்தாலபுரம் என்ற பகுதியில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டு யானைகள் கூட்டமாக சாலையை கடந்து சென்றது.

அதை அவ்வழியாக வாகனம் ஓட்டி வந்த வாலிபர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். அப்போது புதர் மறைவில் மறைந்திருந்த காட்டு யானை திடீரென ஆக்ரோ‌ஷத்துடன் வாகனத்தை துரத்தி உள்ளது.

இதை கண்ட அந்த வாலிபர் சாமர்த்தியமாக வாகனத்தை பின்னோக்கி நகர்த்தி உயிர் தப்பினார்.

அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள வன சாலை என்பதால் யானைகள் அவ்வப்போது சாலையை கடக்கும். எனவே இந்த வழியாக பயணிக்கும் வாகன ஓட்டிகள் வன விலங்குகளை தொந்தரவு செய்யும் வகையில் வாகனங்களை நிறுத்தி புகைப்படம் எடுக்கக்கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Similar News