தனியார் செல்போன் நிறுவனத்தில் ஊழியர்களின் சம்பள பணத்தை மனைவி கணக்கில் செலுத்தி மோசடி செய்த அதிகாரி
புதுச்சேரி:
புதுவை திருவள்ளூர் சாலையில் பிரபல தனியார் செல்போன் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் உதவிமேலாளராக பாக்க முடையான் பட்டை சேர்ந்த ராஜ்குமார்பணி புரிந்து வந்தார்.
இந்த அலுவலகத்தில் 5 ஊழியர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். கடந்த ஆண்டு 2 ஊழியர்கள் புதிதாக சேர்க்கப்பட்டனர். ஆனால், கடந்த ஓராண்டாக அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை.
இதற்கிடையே கடந்த ஆண்டு சேர்க்கப்பட்ட 2 ஊழியர்களுக்கு தற்போது புதிதாக சேர்க்கப்பட்டதாக பணி ஆணை வழங்கப்பட்டது.
கடந்த ஆண்டு பணியில் சேர்க்கப்பட்ட இந்த ஊழியர்களுக்கு புதிதாக பணி ஆணை வழங்கியதில் அலுவலக மானேஜர் கார்த்திகேயனுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து விசாரித்த போது, கடந்த ஆண்டு சேர்க்கப்பட்ட 2 ஊழியர்களின் சம்பள பணத்தை அவர்களுக்கு வழங்காமல் உதவி மேலாளர் ராஜ்குமார் தனது மனைவியின் வங்கி கணக்கில் செலுத்தி இருப்பது தெரிய வந்தது. மொத்தம் ரூ. 2 லட்சம் சம்பள தொகையை ராஜ்குமார் மோசடி செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அந்த நிறுவன மேலாளர் கார்த்திகேயன் உருளையன் பேட்டை போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.