தமிழ்நாடு செய்திகள்
மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம்
மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவில் மாசிமக தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
மேட்டூர்:
மேச்சேரியில் புகழ்பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசிமக தேர் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இதன்படி மாசிமக திருத்தேர் திருவிழா கடந்த 13-ந் தேதி அதிகாலை சக்தி அழைத்தல் மற்றும் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சின்ன தேரோட்டம் நேற்று மாலை 5 மணிக்கு நடந்தது. இதையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். பின்னர் கோவிலில் இருந்து விநாயகர் தேர்முன்னே செல்ல தொடர்ந்து சின்ன தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
தேர் கிழக்கு கோபுரம், சந்தைப்பேட்டை, கிராம சாவடி, மேற்கு கோபுரம் வழியாக கோவிலை இரவு 7 மணிக்கு வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இன்று (புதன்கிழமை) மாலை பெரிய தேரோட்டம் நடந்தது.
முதலில் விநாயகர் தேரும், பின்னால் பெரிய தேரும் கோவிலில் இருந்து தொடங்கி மேற்கு ரத வீதி கிராம சாவடி அருகில் நிறுத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
பின்பு அங்கிருந்து நாளை (வியாழக்கிழமை) விநாயகர் தேர் மற்றும் பெரிய தேர் மீண்டும் நிலைக்கு வந்து சேரும். நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) இரவு சத்தாபரணம் மற்றும் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் பத்ரகாளியம்மன் எழுந்தருளி, பொங்க பாலியிலிருந்து வாணவேடிக்கையுடன் அம்மன் திருவீதி உலாவும் நடைபெறுகிறது.