செய்திகள்
குரும்பர் பள்ளம் என்ற இடத்தில் ரிவால்டோ தண்ணீர் குடித்து ஓய்வு எடுத்தது

தினமும் 3 கி.மீ. வரை மட்டுமே நடக்கும் ‘ரிவால்டோ’ யானை

Published On 2021-02-04 11:12 IST   |   Update On 2021-02-04 11:12:00 IST
மூச்சு திணறலால் ‘ரிவால்டோ’ யானை தினமும் 3 கி.மீ. வரை மட்டுமே நடக்கிறது. தெப்பக்காடு முகாமில் யானையை பராமரிக்க மரக்கூண்டு அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
ஊட்டி:

நீலகிரி மாவட்டம் வாழைத்தோட்டம், மாவ நல்லா அதன் சுற்றுப்புறப் பகுதியில் பொதுமக்களுடன் 15 ஆண்டாக சகஜமாக பழகி வந்த ஆண் யானைக்கு துதிக்கையில் காயம் ஏற்பட்டு மூச்சுவிட சிரமப்பட்டது.

இந்த பகுதியில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு தீ பந்தம் வீசியதால் வேறு ஒரு யானை பலியானது. இதனையடுத்து இந்த யானைக்கும் இதே கதி ஏற்பட்டுவிடும் என்று அறிந்த வனத்துறையினர் யானையை தெப்பக்காடு முகாமுக்கு கொண்டு செல்ல முயன்றனர்.

மூச்சுவிட அவதிப்படும் யானைக்கு மயக்க ஊசி செலுத்தினால் ஆபத்து ஏற்படும் என்று அறிந்த வனத்துறையினர் முதன்முறையாக கும்கி, மயக்க ஊசி, வாகனம் இன்றி ‘ரிவால்டோ யானையை கால்நடையாக தர்பூசணி, கரும்பு உள்ளிட்டவைகளை வழிநெடுக கொடுத்து நேற்று முன்தினம் முதல் அழைத்துசென்று வருகிறார்கள். குரும்பர் பள்ளம் அருகே வந்த யானை ஆற்றில் தண்ணீர் குடித்தது. ஊழியர்கள் அதற்கு மூங்கிலை உணவாக கொடுத்தனர். அதனை தின்ற யானை அங்கேயே ஓய்வெடுத்தது.

இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, மூச்சு திணறலால் ‘ரிவால்டோ’ யானை தினமும், 3 கி.மீ., வரை மட்டுமே நடக்கிறது. அதற்கு மேல் களைப்படைந்து உறங்கி விடுகிறது.

பழம் கொடுத்து மெதுவாக தான் அழைத்து செல்ல முடியும். முதுமலைக்கு செல்ல இன்னும் 2 நாட்கள் ஆகும் என்றனர். இதனிடையே தெப்பக்காடு முகாமில் இந்த யானையை பராமரிக்க மரக்கூண்டு அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Similar News