செய்திகள்
கட்டுமான நிறுவன மேற்பார்வையாளர் தற்கொலை
ரூ.28 லட்சம் வங்கி கடன் பெற்ற தனியார் கட்டுமான நிறுவன மேற்பார்வையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். கடனை திரும்ப கேட்டு வங்கி அதிகாரிகள் நெருக்கடி கொடுத்ததால் அவர் தற்கொலை செய்தாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தாம்பரம்:
சென்னையை அடுத்த குரோம்பேட்டையைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 39). இவர், தனியார் கட்டுமான நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு வசுமதி (32) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.
செந்தில்குமார், கடந்த 2 ஆண்டுகளாக வேலை இல்லாமல் இருந்து வந்தார். இதனால் பல்வேறு வங்கிகளில் கிரெடிட் கார்டுகள் மூலம் ரூ.28 லட்சம் வரை கடன் பெற்றதாகவும், அந்த கடனை திரும்ப செலுத்தும்படி வங்கி அதிகாரிகள் தரப்பில் நெருக்கடி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான செந்தில்குமார், தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த சிட்லபாக்கம் போலீசார், தற்கொலை செய்த செந்தில்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, வங்கி அதிகாரிகள், கடனை திரும்ப கேட்டு நெருக்கடி கொடுத்ததால் செந்தில்குமார் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.