செய்திகள்
முதலமைச்சருக்கு அரியலூர் மாவட்ட அரசு பள்ளி மாணவர்கள் நன்றி கடிதம் வழங்கியபோது எடுத்தபடம்.

வாழும் கர்மவீரரே- முதலமைச்சருக்கு அரியலூர் அரசு பள்ளி மாணவர் நன்றி கடிதம்

Published On 2020-12-18 07:55 IST   |   Update On 2020-12-18 07:55:00 IST
7.5 சதவீத உள்ஒதுக்கீடு மூலம் மருத்துவ படிப்பில் இடம் கிடைத்த அரியலூர் அரசு பள்ளி மாணவர், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, ‘வாழும் கர்மவீரரே, ‘மாணவர்களின் நலன் விரும்பும் முதல்வரே’ என்று கடிதம் மூலம் நன்றி தெரிவித்துள்ளார்.
அரியலூர்:

அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, 7.5 சதவீத அரசு உள் ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவ-மாணவிகள் முதல்-அமைச்சரை சந்தித்து நன்றி கூறினார்கள்.

சா.ரதிவாணன் என்ற மாணவன் முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து கடிதம் ஒன்றை வழங்கினார். அந்த கடிதத்தில் உள்ள வாசகங்கள் வருமாறு:-

எந்தைத் தாயின் மருத்துவக் கனவெல்லாம் களையாது காத்திட்ட கருணை மறவோரே, 7.5 சதவீத அரசு உள் ஒதுக்கீட்டைத் தந்தெமை காத்தீர்....

அரியலூரில் எமை அறிந்திடுவார் யாருமில்லை. அது அன்றொருநாள்....

அறியாத பலருக்கும் அரியவராய் உள்ளோமையா! உங்களின் அரும்பெரும் செய்கையினார். இது இன்றையநாள்....

எமக்கெல்லாம் முகவரி தந்திட்ட மாணவர்களின் நலன் விரும்பும் முதல்வரே

அழியாது உமது பெயர் என்றென்றும் எங்கள் மனமெனும் அவைதனிலே....

ஆனந்தக் கடலினிலே குளிக்க வைத்து, அழகு பார்த்த வாழும் கர்மவீரரே....

நோயெனும் அரக்கன் துளிகூட நுழையாது, தமிழகத்தைக் காத்திடவே யாமுள்ளோம் மறவாதீர்....

கனவை நினைவாக்கிய தமிழக முதல்-அமைச்சருக்கு எங்களது நன்றி என்னும் மலர்களை தங்களது காலடியில் சமர்ப்பிக்கின்றோம்.

இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

சவுமியா என்ற மாணவி கூறும்போது, ‘‘நீட்’’ தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்காத காரணத்தால், எனக்கு மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்குமோ, கிடைக்காதோ? என்று இருந்தபோது, முதல்-அமைச்சரின் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. மாணவர்களின் சார்பாக முதல்-அமைச்சருக்கு கோடான கோடி நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு முன் உதாரணமாக இருந்து, ஏழை-எளிய மக்களுக்கு மருத்துவராகி சேவை செய்வேன்’ என்றார்.

Similar News