செய்திகள்
அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

ஆ.ராசா மூலம் கீழ்த்தரமான அரசியலில் திமுக ஈடுபடுகிறது- அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

Published On 2020-12-07 10:38 GMT   |   Update On 2020-12-07 10:38 GMT
தமிழக அரசியலில் ஆ.ராசா மூலம் ஒரு கீழ்த்தரமான அரசியலை திமுக தலைவர் ஸ்டாலின் கையில் எடுத்துள்ளார் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி குற்றம் சாட்டினார்.
விருதுநகர்:

விருதுநகரில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக அரசியலில் ஆ.ராசா மூலம் ஒரு கீழ்த்தரமான அரசியலை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கையில் எடுத்துள்ளார். ஆ.ராசாவை வைத்து அவதூறாக பேசுவதை வன்மையாக கண்டிக்கிறோம்.

விவசாய சட்டங்களைப் பற்றியும் விவசாயிகளைப் பற்றியும் பேசுவதற்கு ஸ்டாலினுக்கு எந்த அருகதையும் கிடையாது.

காமராஜர் வழியில் நாங்கள் ஏராளமான பள்ளிக்கூடங்களை தந்துள்ளோம். குடிமராமத்து மூலம் ஏராளமான கண்மாய்களை தூர்வாரி உள்ளோம், காமராஜரை பற்றி பேச அ.தி.மு.க.விற்கு மட்டுமே உரிமை உண்டு.

பாரதிய ஜனதா கட்சி ஒன்றும் அமெரிக்காவில் இல்லை. இந்தியாவில்தான் உள்ளது. அந்த கட்சி தீண்டத்தகாத கட்சி இல்லை. இந்தியாவில் பெரும்பாலான மக்கள் வாக்களித்து பிரதமராக மோடி உள்ளார். பா.ஜ.க. திட்டங்களுக்கு நாங்கள் ஆதரவு கொடுத்து வருகிறோம். மக்களுக்கு எதிரான திட்டங்கள் இருந்தால் எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம்.

பாரதிய ஜனதா அழுத்தம் கொடுத்துதான் ரஜினி கட்சி ஆரம்பித்தார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ரஜினி சுயமாக சிந்திக்கக்கூடியவர். ஒட்டுமொத்தமாக சேர்ந்து தி.மு.க.வை படுதோல்வி அடையச் செய்வதுதான் அ.தி.மு.க.வின் ஒரே நோக்கமாகும்.

ரஜினிகாந்த் அரசியலில் பா.ஜ.க. பின்னணியில் இருந்தால் என்ன? முன்னணியில் இருந்தால் என்ன? தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஏன் இவ்வளவு பயப்படுகிறார்?

விருதுநகரில் மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகள் முடிவடைய உள்ளது. ஜனவரியில் முதல்-அமைச்சர் திறந்து வைக்க உள்ளார். விருதுநகர் மாவட்டத்திற்கு அவர் வந்தால் வெறுங்கையோடு வரவே மாட்டார் ஏராளமான திட்டங்களை கொண்டு வருவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News