செய்திகள்
கைது

மது விற்பனைக்கு உடந்தையாக இருந்ததாக புகார்- கலால் துறை தாசில்தார் அதிரடி கைது

Published On 2020-04-20 13:16 IST   |   Update On 2020-04-20 13:16:00 IST
நெட்டப்பாக்கம் அருகே மது விற்பனைக்கு உடந்தையாக இருந்ததாக கலால் துறை தாசில்தாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேதராப்பட்டு:

நெட்டப்பாக்கம் அருகே மடுகரை பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக அதிரடிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

இதையடுத்து அதிரடிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்றவரை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் அதே பகுதியில் உள்ள தனியார் மதுக்கடையில் வேலை பார்க்கும் ஆனந்த் பாபு என்பதும் இவர் கலால் துறை அதிகாரிகள் உதவியுடன் மதுபாட்டில்களை விற்று வந்தது தெரிய வந்தது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு மதுக்கடையில் ஆய்வு நடத்த வந்த கலால் துறை தாசில்தார் மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் உள்ளிட்ட 6 பேருக்கு சில மதுபாட்டில்களை இலவசமாக கொடுத்து விட்டு மது பாட்டில்களை விற்க உதவியது தெரியவந்தது.

இதையடுத்து அதிரடிப்படை போலீசார் ஆனந்த் பாபுவை நெட்டப்பாக்கம் போலீசில் ஒப்படைத்தனர்.

அவர் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் நெட்டப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு மது கடத்தல் மற்றும் விற்பனைக்கு உடந்தையாக இருந்த கலால்துறை தாசில்தார் மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கலால்துறை தாசில்தாரை அதிரடியாக கைது செய்தனர்.அவர் பெயர் விவரங்களை போலீசார் வெளியிடவில்லை.

Similar News