தாயுள்ளத்தோடு புதுவைக்கு பிரதமர் உதவ வேண்டும்- ரங்கசாமி வேண்டுகோள்
புதுச்சேரி:
புதுவை சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவரும் என்.ஆர்.காங்கிரஸ் நிறுவனருமான ரங்கசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய, மாநில அரசின் ஊரடங்கால் பல துயரங்களை எதிர்த்து மக்கள் போராடி வருகின்றனர். புதுவையில் ரூ. 2 ஆயிரம் ரேஷன் கார்டு கணக்கில் அரசு செலுத்தியுள்ளது.
தற்போது மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் அனைத்து ரேஷன் அட்டைத்தாரர்களுக்கும் மேலும் ரூ. 3 ஆயிரம் வங்கிக் கணக்கில் தர வேண்டும். சிவப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு தருவது போல் மஞ்சள் அட்டைத்தாரர்களுக்கும் அரிசி, பருப்பு தர அரசு முன்வேண்டும்.
மத்திய அரசு அறிவித்த இலவச அரிசி விநியோகம் முறையாக இல்லை என்று ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் தொடங்கி துணை சபாநாயகர் வரை புகார் தெரிவித்துள்ளதால் இதில் அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும். எந்த வித பாகுபாடின்றி அனைத்து தொகுதிகளுக்கும் இலவச அரிசி, பருப்பு வழங்க வேண்டும். மே மாதத்துக்கும் புதுவையிலுள்ள 3.5 லட்சம் ரேஷன் அட்டை தாரர்களுக்கும் இலவச அரிசி, பருப்பு, கோதுமை தர வேண்டும்.அத்துடன் 22 மாதங்களாக தரப்படாமல் உள்ள அரிசி பணத்தை இத்தருணத்தில் தந்தால் மக்களுக்கு பேருதவியாக இருக்கும். அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பணி இல்லாததால் கூடுதலாக அவர்களுக்கு ரூ. 2 ஆயிரம் வங்கிக்கணக்கில் தர வேண்டும்.
நாட்டின் கடைக்கோடியில் உள்ள சிறு மாநிலமான புதுவை நிதி பற்றாக்குறையால் தவிப்பதால் பிரதமர் தாயுள்ளத்தோடு நிதி உதவி தர வேண்டும்.
இவ்வாறு ரங்கசாமி அறிக்கையில் கூறியுள்ளார்.