வடலூரில் கொலை வழக்கில் விடுதலையான ரவுடி கொலை
வடலூர்:
புதுவை மாநிலம் லாஸ்பேட்டையை சேர்ந்தவர்கள் சுந்தர், முரளி. இவர்கள் 2 பேரும் ரவுடிகள். இவர்கள் தொழில் அதிபர்களை மிரட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வந்தனர்.
இதைத்தொடர்ந்து சுந்தருக்கும், முரளிக்கும் இடையே தொழில்போட்டி ஏற்பட்டது. இதனால் அவர்கள் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வந்தனர். கடந்த 15.2.2017 அன்று முரளி கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து சுந்தர், தட்டாஞ்சாவடியை சேர்ந்த செந்தில், அமரன் (வயது 24), அசோக் மற்றும் 17 வது சிறுவன் உள்பட 12 பேரை போலீசார் கைது செய்தனர். கைதான அமரன் ரவுடி ஆவார். அவர் மீது அடிதடி உள்பட பல்வேறு வழக்குகள் போலீஸ்நிலையத்தில் உள்ளது. கைது செய்யப்பட்ட அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறுவன் மட்டும் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டான்.
இந்த வழக்கு புதுச்சேரி 2-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்துவந்தது. இந்த வழக்கில் நேற்று மாலை தீர்ப்பு கூறப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட அமரன் உள்பட 11 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
இதனைத்தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்ட அமரனை அவரது தந்தை பாண்டியன் மற்றும் மைத்துனர் உதயகுமார் ஆகியோர் ஒரு காரில் அழைத்துக்கொண்டு நேற்று தஞ்சாவூருக்கு சென்றனர். காரை தஞ்சாவூரை சேர்ந்த மாரிமுத்து என்பவர் ஓட்டிச்சென்றார்.
இரவு 10 மணி அளவில் அவர்கள் சென்ற கார் கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள கருங்குழி அருகே சென்றது. அப்போது காரில் இருந்த பாண்டியனும், உதயகுமாரும் காரை சாலையோரமாக நிறுத்தும்படி கூறினர். பின்பு பாண்டியன், உதயகுமார், மாரிமுத்து ஆகியோர் காரில் இருந்து இறங்கி அங்கிருந்த டாஸ்மாக் கடைக்கு சென்றனர். அப்போது அமரன் மட்டும் காரில் தனியாக இருந்தார்.
அந்த நேரத்தில் 4 மோட்டார் சைக்கிளில் 7 பேர் கொண்ட கும்பல் கையில் வீச்சரிவாளுடன் அங்கு வந்தனர். அவர்களை கண்டதும் காரில் இருந்த அமரன் இறங்கி தப்பி ஓடமுயன்றார். அப்போது அந்த கும்பல் அமரனை சரமாரியாக வெட்டி சாய்த்தது. மேலும் அவர்கள் ஆத்திரம் தீராமல் தலையை கொத்துகறிபோல் வெட்டினர். இதில் தலை சிதைந்து ரத்தவெள்ளத்தில் அமரன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
அப்போது மதுபாட்டில் வாங்கிக்கொண்டு பாண்டியன், உதயகுமார், மாரிமுத்து ஆகியோர் வந்தனர். உடனே அந்த கும்பல் அமரனின் தந்தை பாண்டியனையும் சரமாரியாக வெட்டி விட்டு தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் சென்றுவிட்டனர்.
இதுகுறித்த தகவல் வடலூர் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. நெய்வேலி துணை போலீஸ்சூப்பிரண்டு லோகநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்த அமரன் உடலை மீட்டனர். பின்பு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
படுகாயம் அடைந்த பாண்டியனை குறிஞ்சிப்பாடி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. பின்பு மேல் சிகிச்சைக்காக கடலூர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
பிரபல ரவுடி முரளி கொலை வழக்கு தொடர்பாக பழிக்குபழியாக ரவுடி அமரனை கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேக்கிக்கின்றனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக வடலூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் அமரனை கொலை செய்தது புதுவையை சேர்ந்த பார்த்தீபன், சதீஷ், சரவணன் உள்பட 7 பேர் என்பது தெரியவந்தது.
கொலையாளிகளை பிடிக்க துணைபோலீஸ்சூப்பிரண்டு லோகநாதன் தலைமையில் ஒரு தனிப்படையும், டெல்டா பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையில் ஒரு தனிப்படையும் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினர். கொலையாளிகள் ஊட்டி அல்லது கொடைக்காணல் சென்று பதுங்கியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.கொலையாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்.
கொலை வழக்கில் விடுதலையான ரவுடி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.