உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி மகத்தான வெற்றிபெறும்- ஜி.கே.மணி பேட்டி
கடலூர்:
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் தனியார் திருமண மண்டபத்தில் பா.ம.க. கட்சியின் கடலூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் மாநில தலைவர் ஜி.கே. மணி கலந்து கொண்டு பேசினார். அதன்பின்பு அவர் நிருபர்களிடம் கூறியதாவது: -
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. தற்போது அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இடம்பெற்றுள்ளது.
உள்ளாட்சி தேர்தலிலும் அதே கூட்டணி தொடரும். உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க.வுக்கு தேவையான இடங்களை அ.தி.மு.கவிடம் கேட்டு பெறுவோம். நாங்கள் கேட்டு வாங்கிய இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம்.
மேலும் கூட்டணி கட்சிகளின் வெற்றிக்காக பாடுபடுவோம். உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.
காவேரி, முல்லை, பாலாறு போன்ற ஆறுகள் இருந்தாலும் அடிக்கடி நீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதை தடுக்க தமிழ்நாட்டில் உள்ள ஆறுகளில் தடுப்பணை மற்றும் கால்வாய் அமைக்க வேண்டும். இதற்கு மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.
கூட்டுறவு சர்க் கரை ஆலைகளில் கரும்பு அரவையை நிறுத்திவிட்டார்கள். தொடர்ந்து கரும்பு அரவை தொடங்க வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை வழங்க வேண்டும்.
நெய்வேலி என்.எல்.சி.யில் நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்கவேண்டும்.
வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு என்.எல்.சியில் வேலை வழங்கப்பட்டுள்ளது. இது கண்டிக்க தக்கதாகும்.
கடலூரில் ராமசாமி படையாட்சியாருக்கு மணி மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதை வரவேற்கிறோம்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்க கோவில் நிர்வாகம் சீர் செய்ய வேண்டும். தமிழக அரசும் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.