செய்திகள்
ஊட்டி பாலடாவில் உள்ள சர்வதேச பள்ளி விழாவில் மைத்ரி விக்கிரமசிங்கே கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.

தோல்விகளை கண்டு மாணவர்கள் பயப்படக்கூடாது- இலங்கை பிரதமர் மனைவி மைத்ரி விக்கிரமசிங்கே பேச்சு

Published On 2019-10-17 11:16 GMT   |   Update On 2019-10-17 11:16 GMT
பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் தோல்விகளை கண்டு பயப்படக்கூடாது என்று ஊட்டியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இலங்கை பிரதமர் மனைவி மைத்ரி விக்கிரமசிங்கே பேசியுள்ளார்.
ஊட்டி:

ஊட்டி பாலடாவில் உள்ள சர்வதேச பள்ளி விழாவில் இலங்கை கலினியா பல்கலைக்கழகத்தின் நிறுவன இயக்குனரும், இலங்கை பிரதமர் மனைவியுமான மைத்ரி விக்கிரமசிங்கே கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

வாழ்வில் ஒவ்வொரு கால கட்டத்திலும் ஆர்வத்துடன் செயல்பட்டால் தான் நினைத்ததை முடிக்க முடியும். பெண்கள் கல்வி படிப்பை முடித்தவுடன் வேலை தேடி தங்களுடைய வாழ்க்கைக்கு தேவையான பொருளாதாரத்தை மேம்படுத்தி கொள்வதுடன் சுயமாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.

எனது கணவர் அரசியலில் நம்பிக்கை, விடா முயற்சியுடன் போராடியதால் வெற்றி பெற்று தற்போது பிரதமராக உள்ளார். இது அவரின் சுயநம்பிக்கைக்காகவும், தன்னம்பிக்கைக்காகவும் கிடைத்த வெற்றி.

பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் தோல்விகளை கண்டு பயப்படக்கூடாது. அப்போது தான் நீங்கள் வாழ்க்கையில் வெற்றி காணும்போது நல்ல நண்பர்கள், தமது குடும்பம் ஆகியவற்றை சரியான முறையில் கையாள முடியும்,

கல்வி நிறுவனங்கள் வளமாக பாரம்பரியத்தை இழக்காமல் மதிப்பு கூட்டப்பட்ட கல்வியை முறையாக மேம்படுத்த வேண்டும். மேற்கத்திய கலாச்சாரம் நமது கல்வி முறையை ஆக்கிரமிக்க கூடாது. சாதி, மதம் எல்லை தாண்டி பயங்கரவாதம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு மதிப்பு கூட்டப்பட்ட கல்வி முறைகளால் தீர்வு காண முடியும்.

மாறிவரும் உள்நாட்டு மற்றும் சர்வதேச தேவைக்கேற்ப நமது திட்டங்களை சீர்திருத்தம் செய்ய வேண்டும். மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மேம்படுத்தப்பட்ட கல்வி திட்டங்களை கற்பிப்பதன் மூலம் எவ்வித சவால்களையும் அவர்கள் எதிர்கொள்ள முடியும். சர்வதேச அளவில் எழும் பிரச்சனைகளை தீர்வு காணும் முறைகள் பல்கலைகழகங்களில் திட்டங்கள், கல்விகள் அறிமுகப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து பள்ளியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
Tags:    

Similar News