செங்கல்பட்டு-அரக்கோணம் சர்க்குலர் ரெயில் கட்டணம் 15 ரூபாய்
சென்னை:
சென்னை புறநகர் மக்களின் நீண்டநாள் கோரிக்கையான சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் வழியாக அரக்கோணத்துக்கு சர்க்குலர் ரெயில் விட கோரிக்கை விடப்பட்டுள்ளது.
தெற்கு ரெயில்வே இதற்கான திட்டப்பணிகளை தொடங்கியது. இப்பணிகள் முடிவடைந்து நேற்று முதல் சர்க்குலர் ரெயில் பயணிகள் சேவை தொடங்கப்பட்டது. 194 கிலோ மீட்டர் தூரம் உடைய நாட்டின் மிக நீண்ட சுற்றுவட்ட ரெயில் பாதை இதுவாகும்.
பயணிகள், பொது மக்களிடையே இந்த ரெயில் சேவைக்கு பெரிதும் வரவேற்பு ஏற்பட்டது. பயணிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம், திருவள்ளூர், பெரம்பூர், சென்னை கடற்கரைக்கு 2 சர்க்குலர் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
செங்கல்பட்டு - அரக்கோணம் செல்ல ரூ. 15 கட்டணம் . மாதாந்திர சீசன் டிக்கெட் கட்டணம் ரூ. 270. பஸ் கட்டணத்தை விட ரெயில் கட்டணம் மிகவும் குறைவாகும். இதனால் பயணிகள் சர்க்குலர் ரெயிலை பெரிதும் வரவேற்றுள்ளனர். சென்னை கடற்கரையில் இருந்து அரக்கோணம் வழியாக மீண்டும் சென்னை கடற்கரை வந்தடைய சர்க்குலர் ரெயிலில் 6 மணி நேரம் ஆகிறது. இச்சேவையை விரைவு ரெயில் சேவையாக மாற்ற வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சர்க்குலர் ரெயில் சேவையால் காஞ்சிபுரம் மக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காஞ்சிபுரம், செங்கல்பட்டில் இருந்து மேற்கு மாவட்டங்களான தர்மபுரி, சேலம், ஈரோடு, கோவை மாவட்டங்களுக்கும் கேரளம் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு இனி காஞ்சிபுரத்தில் இருந்து அரக்கோணம் சென்று அங்கிருந்து செல்லலாம்.
அதேபோல அரக்கோணம், திருவள்ளூர், திருநின்றவூர், ஆவடி, பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு காஞ்சிபுரம், செங்கல்பட்டில் இருந்து அரக்கோணம் மார்க்கமாக செல்லாம். மேலும் அரக்கோணத்தில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு உள்பட தென் மாவட்டங்களுக்கு இனி எளிதாக பயணிக்கலாம்.
கட்டிட தொழிலாளவ்கள், அரசு அலுவலர்கள், பெரு நிறுவன ஊழியர்கள், சுற்றுலா பயணிகள் ஆகியோரும் சர்க்குலர் ரெயில் சேவையால் பெரிதும் பயன் பெறுவார்கள். #train