செய்திகள்

காஞ்சீபுரம் அருகே ஆட்டோ மீது பஸ் மோதல்: 6 வயது சிறுமி பலி

Published On 2016-12-26 07:08 GMT   |   Update On 2016-12-26 07:08 GMT
காஞ்சீபுரம் அருகே ஆட்டோ மீது பஸ் மோதலில் 6 வயது சிறுமி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காஞ்சீபுரம்:

தாம்பரத்தை அடுத்த சேலையூர் அருகே உள்ள மாடம் பாக்கத்தை சேர்ந்தவர் விஜய். ஆட்டோ டிரைவர். இவரது மகன் தமிழ்செல்வன், 6 வயது மகள் காவியா. அருகில் உள்ள பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தாள்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜய் சபரிமலை கோவிலுக்கு சென்றார். கோவில் பிரசாதங்களை செய்யாறு அருகே உள்ள செங்கம் பூண்டி கிராமத்தில் வசிக்கும் பெற்றோரிடம் கொடுப்பதற்காக உறவினர் சக்திவேலுடன் ஆட்டோவில் சென்றார்.

அவர்களுடன் விஜயின் மகன் தமிழ்செல்வன், மகள் காவியா மற்றும் உறவினர்கள் மணி, பழனி, விஷ்வா ஆகியோரும் சென்றனர்.

காஞ்சீபுரம் அருகே செவிலிமேடு பாலாற்று பாலத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே திருவண்ணாமலையில் இருந்து காஞ்சீபுரம் நோக்கி வந்த அரசு பஸ் திடீரென ஆட்டோ மீது மோதியது.

பஸ்சின் கீழ் பகுதியில் சிக்கிய ஆட்டோ நசுங்கி உருக்குலைந்தது. இடிபாடுகளில் சிக்கிய சிறுமி காவியா சம்பவ இடத்திலேயே பலியானார்.

ஆட்டோவில் இருந்த சக்திவேல், மணி, பழனி உள்பட 6 பேரும் படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்ததும் காஞ்சீபுரம் தாலுக்கா இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்களுக்கு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இது குறித்து காஞ்சீபுரம் தாலுக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Similar News