காஞ்சீபுரத்தில் நடமாடும் ஏ.டி.எம்.சேவை மையம்: கலெக்டர் தொடங்கி வைத்தார்
காஞ்சீபுரம்:
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால் அவற்றை மாற்ற தினமும் வங்கிகளில் கூட்டம் அலை மோதுகிறது. பணத்தை எடுக்க ஏ.டி.எம். மையங்கள் முன்பும் நீண்ட வரிசை காணப்படுகிறது.
காஞ்சீபுரம் பகுதியில் உள்ள வங்கிகள் முன்பு தினமும் அதிகாலையிலேயே பொதுமக்கள் காத்து நிற்கிறார்கள். பெரும்பாலான ஏ.டி.எம். மையங்கள் மூடி கிடப்பதால் பணம் எடுக்க முடியாமல் அவதிப்பட்டனர்.
இந்த நிலையில் காஞ்சீபுரம் நகரம் மற்றும் புறநகர் பகுதி, மக்கள் கூடும் இடங்களில் பாரத ஸ்டேட் வங்கி சார்பில் நடமாடும் ஏ.டி.எம். சேவை தொடங்கப்பட்டு உள்ளது. இதனை மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி தொடங்கி வைத்தார். இதில் சப்-கலெக்டர் அருண்தம்புராஜ், வங்கியின் மண்டல துணை பொது மேலாளர் குருபிரசாத், முதன்மை மேலாளர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நடமாடும் வாகனம் மூலம் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்லும் ஊழியர்கள் கையடக்க கருவி மூலம் பொதுமக்கள் கொடுக்கும் டெபிட் கார்டை பயன்படுத்தி ரூ.2 ஆயிரம் வழங்கினர்.
நடமாடும் ஏ.டி.எம். சேவையால் பணம் எடுப்பதற்காக வங்கி ஏ.டி.எம். மையங்கள் முன்பு மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை இல்லாததால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.