செய்திகள்

ரெயிலில் கொள்ளை: செல்போன் உரையாடல் மூலம் குற்றவாளிகளை பிடிக்க தீவிரம்

Published On 2016-08-14 15:46 IST   |   Update On 2016-08-14 15:46:00 IST
ரெயிலில் ரூ.6 கோடி கொள்ளை சம்பவத்தில் செல்போன் உரையாடல் மூலம் குற்றவாளிகளை பிடிக்க சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருத்தாசலம்:

சேலத்தில் இருந்து கடந்த 8-ந் தேதி இரவு சென்னை சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலின் மேற்கூரையில் துளைபோட்டு 6 கோடி ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எழும்பூர் யார்டில் ரெயில் பெட்டி நிறுத்தப்பட்டிருந்தபோது கொள்ளை நடந்ததா? அல்லது சின்னசேலத்தில் இருந்து விருத்தாசலத்துக்கு ரெயில் மெதுவாக வரும் வழியில் நடந்ததா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

அதில் எழும்பூர் யார்டில் ரெயில்பெட்டி நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் கொள்ளை நடந்திருக்க அதிக வாய்ப்பு உள்ளதாக போலீசார் கருதுகிறார்கள்.

ஆனாலும் கொள்ளை சம்பவத்துக்கான முன்னேற்பாடு பணிகளில் கொள்ளையர்கள் சேலம், சின்னசேலம், விருத்தாசலம் ஆகிய பகுதிகளிலிருந்து ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர்.

எனவே கொள்ளையர்கள் இந்த பகுதிகளிலிருந்து சென்னையில் உள்ள நபர்களுடன் செல்போனில் பேசி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். எனவே கொள்ளையர்களின் மொபைல்போன் உரையாடலை கண்டறியும் முயற்சியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இறங்கியுள்ளனர்.

இதையொட்டி சென்னை சைபர்கிரைம் இன்ஸ்பெக் டர் மாணிக்கவேல் தலை மையில் 6 பேர் கொண்ட குழுவினர் சென்னையில் இருந்து விழுப்புரம் வந்தனர். ரெயில் நிலையத்தில் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து விருத்தாசலம் ரெயில் நிலையத்துக்கு வந்தனர். கடந்த 8-ந் தேதி இரவு விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு செல்போனில் யார் யார்? பேசினார்கள் என்றும், சென்னையில் இருந்து விருத்தாசலத்துக்கு யாருடைய செல்போனுக்கு அழைப்புகள் வந்தது என்றும் விசாரணை நடத்தினர்.

மேலும் விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் சம்பவம் நடந்த அன்று பணியில் இருந்த ஊழியர்கள் மற்றும் போலீசாரிடமும் விசாரணை நடத்தினர்.

Similar News