ரெயிலில் ரூ.6 கோடி கொள்ளை: விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் விசாரணை
விருத்தாசலம்:
சேலத்திலிருந்து கடந்த 8-ந் தேதி விருத்தாசலம் வழியாக சென்னை சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டியின் மேல்பகுதியில் துளைபோட்டு ரூ.6 கோடியை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
இந்த கொள்ளை வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டது. அவர்கள் நேற்று முன்தினம் முதல் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
நேற்று காலை சின்னசேலம் பகுதியில் ரெயில்வே ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். ரெயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருந்ததா? என்று கேட்டனர்.
அதற்கு அவர்கள் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படவில்லை என்று கூறினர். பின்னர் ரெயில் நிலையம் அருகே உள்ள சக்தி குடியிருப்பு பகுதிக்கு சென்று அந்த பகுதியில் உள்ள மக்களிடம் விசாரித்தனர்.
பொதுமக்களிடம் தண்டவாளத்தின் அருகே உள்ள வீடுகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதா? என்று கேட்டறிந்தனர்.
விருத்தாசலம் ரெயில் நிலையத்துக்கு கடலூர் சி.பி.சி.ஐ.டி.இன்ஸ்பெக்டர் தீபா தலைமையில் 11 பேர் கொண்ட குழுவினர் நேற்று மாலை வந்தனர். கொள்ளை நடந்த சம்பவம் குறித்து ரெயில் நிலைய அதிகாரி (ஸ்டேசன் மாஸ்டர்) ஜெகதீசனிடம் விசாரணை நடத்தினர்.
ரெயில் நின்று சென்ற நேரம், அந்த பகுதியில் உள்ள பாதுகாப்பு ஆகியவை குறித்து கேட்டறிந்தனர். கொள்ளை நடந்த நாளில் பணியில் இருந்த ரெயில்வே அதிகாரிகள், ஊழியர்கள், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரிடமும் விசாரணை நடத்தினர். 3 மணிநேரம் இந்த விசாரணை நடந்தது.
சின்னசேலத்தில் இருந்து விருத்தாசலம் வரை ரெயில்வே சுரங்கப்பாதை பணியும், தண்டவாளம் சீரமைக்கும் பணியும் நடந்து வருகிறது.
அந்த வழியாக ரெயில்கள் மெதுவாக சென்று வருகின்றன. மேலும் அந்த பகுதி ரெயில் தண்டவாளம் அருகே காட்டுப்பகுதியும் உள்ளது. இந்த பகுதியை ரெயில்வே பாதுகாப்பு படை குற்றப்புலனாய்வு உதவி ஆணையர் விணுதேவ்சச்சின் தலைமையிலான குழுவினர் பார்வையிட்டனர்.
விருத்தாசலம் அருகே உள்ள முகாசபரூரில் இருந்து விருத்தாசலம் ஜங்சன் வரையிலுள்ள தண்டவாளப்பகுதியில் தடயங்கள் ஏதும் கிடைக்கிறதா என்றும் ஆய்வு செய்தனர்.