செய்திகள்

சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி சாமி தரிசனம்

Published On 2016-06-03 10:32 IST   |   Update On 2016-06-03 10:33:00 IST
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
நாகப்பட்டினம்:

சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி சிறப்பு யாகம் செய்தார்.

2016 சட்டமன்ற தேர்தலில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அ.தி.மு.க. தலைமை சீட்டு வழங்கியது. தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடந்த நிலையில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளில் பணம் அதிகளவில் பறிமுதல் செய்யப்பட்டதால் அந்த தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்துதேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலவர் கோவிலுக்கு தரிசனம் செய்வதற்காக குடும்பத்துடன் வந்தார். முன்னதாக கோவிலில் சத்ரு சம்ஹார யாகம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந்த யாகத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டார். அதைதொடர்ந்து சிக்கல் சிங்காரவேலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சிங்காரவேலவருக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டது. இதில் செந்தில்பாலாஜி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். கோவில் பிரகாரத்தை சுற்றி வந்து, வேல் நெடுங்கண்ணி அம்மனை தரிசனம் செய்தார். பின்னர் கோவிலில் இருந்து வெளியே வந்த முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் இதுதொடர்பாக கேட்டபோது சாமி தரிசனம் செய்வதற்காக வந்தேன் என்று கூறினார்.

Similar News