செய்திகள்

ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பத்திரப்பதிவு அலுவலக ஊழியர் கைது

Published On 2016-04-02 08:12 IST   |   Update On 2016-04-02 08:12:00 IST
ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பத்திரப்பதிவு அலுவலக ஊழியர் கைது செய்யப்பட்டார்.
செங்கல்பட்டு:

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுகா மகான்யம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 31). இவர் அந்த பகுதியில் 10 சென்ட் வீட்டுமனை வாங்கியுள்ளார். அந்த வீட்டுமனையை பத்திரப்பதிவு செய்வதற்காக செங்கல்பட்டில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் திட்ட மதிப்பீடு கேட்டு கடந்த சில நாட்களுக்கு முன்னர் விண்ணப்பித்திருந்தார்.

பத்திரப்பதிவு அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்த கோவிந்தன் (41) நிலத்தின் மதிப்பீட்டை குறைத்து போட லஞ்சமாக ரூ.25 ஆயிரம் கேட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த கண்ணன் இதுகுறித்து காஞ்சீபுரம் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு சிவபாதசேகரனிடம் புகார் செய்தார். போலீசாரின் ஆலோசனைபடி ரசாயனம் தடவிய ரூ.25 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கண்ணன் கோவிந்தனிடம் கொடுத்தார்.

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை இன்ஸ்பெக்டர் தமிழரசி தலைமையிலான போலீசார் கோவிந்தனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

பின்னர் அவரை செங்கல்பட்டு கூடுதல் அமர்வு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கோவிந்தனை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்பேரில் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

Similar News