செய்திகள்
ராகுல் டிராவிட்

இலங்கை தொடர்: இந்திய அணிக்கு ராகுல் டிராவிட் பயிற்சியாளர்- பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா

Published On 2021-06-15 10:20 GMT   |   Update On 2021-06-15 10:20 GMT
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் இங்கிலாந்து தொடருக்காக இந்திய அணியுடன் சென்றுள்ளதால், இலங்கை தொடரில் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக செயல்படுவார்.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வருகிற 18-ந்தேதி தொடங்குகிறது.

முக்கியமான தொடர் என்பதால் இந்திய அணியுடன் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சென்றுள்ளார். இந்திய ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணி ஜூலை 13-ந்தேதி முதல் ஜூலை 25-ந்தேதி வரை இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து விளையாடுகிறது.

இலங்கை தொடருக்கான இந்திய அணியில் முக்கியமான வீரர்கள் இடம்பெறவில்லை. இதனால் தவான் தலைமையிலான அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரவி சாஸ்திரி இல்லாததால் பயிற்சியாளர் ஒருவர் அணியுடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக செயல்படுவார் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். ஏற்கனவே பிசிசிஐ தலைவர் கங்குலியும் ராகுல் டிராவிட்டுதான் பயிற்சியாளர் எனத் தெரிவித்திருந்தார்.

ராகுல் டிராவிட் இந்திய கிரிக்கெட் அகாடமியின் தலைமை ஆலோசகராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News