செய்திகள்
அக்சார் பட்டேல், அஷ்வின்

இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் 53/3: வெற்றிக்கு 429 ரன்கள் தேவை- கைவசம் 7 விக்கெட்

Published On 2021-02-15 18:53 IST   |   Update On 2021-02-15 18:53:00 IST
சென்னை சேப்பாக்கம் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 3-வது நாள் ஆட்ட முடிவில் 2-வது இன்னிங்சில் 3 விக்கெட் இழப்பிற்கு 53 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 2-வது இன்னிங்சில் அஷ்வின் சதம் விளாச இந்தியா 286 ரன்கள் அடித்தது. இதனால் இங்கிலாந்து அணிக்கு 482 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா.

பந்து மிகப்பெரிய அளவில் டர்ன் ஆகும் நிலையில் 482 ரன்கள் இலக்கை எதிர்பார்க்க முடியாத நிலை என்ற சூழ்நிலையில் இங்கிலாந்து களம் இறங்கியது. இங்கிலாந்து அணி 17 ரன்கள் எடுத்திருந்தபோது தொடக்க ஜோடியை சாய்த்தார் அக்சார் பட்டேல். டாம் சிப்லி 3 ரன் எடுத்த நிலையில் எல்.பி.டபிள்யூ மூலம் வெளியேறினார்.

அடுத்து வந்த டொமினிக் லாரன்ஸ் அடித்து விளையாட தொடங்கினார். மறுமுனையில் ரோரி பேர்ன்ஸ் 25 ரன்கள் எடுத்த நிலையில் அஷ்வின் பந்தில் வெளியேறினார். நைட் வாட்ச்மேனாக களம் இறங்கிய ஜேக் லீச் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்.

4-வது விக்கெட்டுக்கு ஜோ ரூட் களம் இறங்கினார். கடைசி ஓவரை அக்சார் பட்டேல் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்து ஜோ ரூட்டின் பேடில் பட்டது. அம்பயர் அவுட் கொடுக்கவில்லை. இந்தியா ரிவியூ சென்றது. பந்து ஸ்டம்பை தாக்கினாலும், நடுவர் முடிவு என அறிவிக்கப்பட்டது. இதனால் ஜோ ரூட் அவுட்டில் இருந்து தப்பினார்.

இங்கிலாந்து இன்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 53 ரன்கள் எடுத்துள்ளது. கைவசம் 7 விக்கெட் உள்ள நிலையில், 429 ரன்கள் தேவை.

Similar News