செய்திகள்
புஜாரா அவுட் ஆன காட்சி

சென்னை டெஸ்டில் 2-வது இன்னிங்சில் விக்கெட்டுகள் சரிவு - உணவு இடைவேளை வரை இந்திய அணி 156/6

Published On 2021-02-15 12:13 IST   |   Update On 2021-02-15 12:13:00 IST
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் எடுத்துள்ளது.

சென்னை:

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்தியா முதல் இன்னிங்சில் 329 ரன் குவித்தது. இந்திய வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 134 ரன்னில் சுருண்டது.

பென் போக்ஸ் அதிகபட்சமாக 42 ரன் (அவுட் இல்லை) எடுத்தார். அஸ்வின் 5 விக்கெட்டும், இசாந்த் சர்மா, அக்‌ஷர் பட்டேல் தலா 2 விக்கெட்டும், முகமது சிராஜ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

195 ரன்கள் முன்னிலையில் 2-வதுஇன்னிங்சை ஆடிய இந்தியா நேற்றைய 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 54 ரன் எடுத்து இருந்தது.

சுப்மன் கில் 14 ரன்னில் ஜேக் லீச் பந்தில் ஆட்டம் இழந்தார். ரோகித் சர்மா 25 ரன்னிலும் , புஜாரா 7 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

இன்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. 249 ரன்கள் முன்னிலை, கைவசம் 9 விக்கெட் என்ற நிலையில் இந்திய அணி தொடர்ந்து விளையாடியது.

ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே இந்திய விக்கெட்டுகள் சரிந்தன. 65 ரன்னில் 4 விக்கெட்டுகள் விழுந்தன.

ரோகித்சர்மா 26 ரன்னிலும், ரி‌ஷப்பண்ட் 8 ரன்னிலும் லீச் பந்தில் ஆட்டம் இழந்தனர். புஜாரா 7 ரன்னில் ரன் அவுட் ஆனார்.

ரகானே 10 ரன் எடுத்து இருந்த போது மொய்ன் அலி பந்தில் பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த அக்‌ஷர் படேல் 7 ரன்னிலும் வெளியேறினார். அப்போது அணியின் ஸ்கோர் 106 ஆக இருந்தது. பந்து வீச்சுக்கு ஏற்ற இந்த ஆடுகளத்தில் விக்கெட்டுகள் எளிதில் விழுகின்றன. இதனையடுத்து விராட் கோலியும் அஸ்வினும் நிதானாமாக ஆடி வருகின்றனர்.

உணவு இடைவேளை வரை இந்திய அணி 351 ரன்களுக்கு மேல் முன்னிலை பெற்று உள்ளது. இதனால் இந்த டெஸ்டில் இந்திய அணி வலுவான நிலையில் இருக்கிறது. இந்த டெஸ்டை பொறுத்த வரை இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது.

Similar News