செய்திகள்
பிரதமர் நிவாரண நிதிக்கு எம்.பி.க்கள் நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாய் ஒதுக்கினார் கவுதம் கம்பிர்
இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேனும், தற்போதைய எம்.பி.யுமான கவுதம் கம்பிர் கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் பிரதமர் நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கியுள்ளார்.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு நிதி வழங்கலாம். அதை பிரதமர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைக்கலாம் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். இதனடிப்படையில் நிதி வழங்கப்பட்டு வருகிறது.
ரெயில்வே ஊழியர்கள், ராணுவ வீரர்கள் தங்களது ஒருநாள் சம்பளத்தை வழங்கியுள்ளனர். நாட்டின் பெரும் தொழில் அதிபர்கள், விளையாட்டு வீரர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பொதுமக்கள் நிதி வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேனும், பா.ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவருமான கவுதம் கம்பிர் தன்னுடைய எம்.பி.யின் உள்ளூர் மேம்பாட்டு திட்டத்திற்கான நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாயை வழங்கியுள்ளார்.
இதுகுறித்து கவுதம் கம்பிர் கூறுகையில் ‘‘இந்த நேரம் நாட்டின் அனைத்து வளங்களையும் கொரோனாவிற்கு எதிரான போரில் செயல்படுத்த வேண்டும். நான் உள்ளூர் மேம்பாட்டு திட்டத்திற்கான நிதியில் இருந்து ஒருகோடி ரூபாயை ஒதுக்கியுள்ளேன். ஏற்கனவே என்னுடைய ஒரு மாத சம்பளத்தை வழங்கியுள்ளேன். நாம் ஒன்றாக நிற்போம்...’’ எனத் தெரிவித்துள்ளார்.