செய்திகள்
ரிஷப் பண்ட்

ரிஷப் பண்ட் ஆடும் லெவனில் இடம் பிடிக்காதது குறித்து டெல்லி அணி உரிமையாளர் விமர்சனம்

Published On 2020-02-14 10:54 GMT   |   Update On 2020-02-14 10:54 GMT
நியூசிலாந்துக்கு எதிரான எட்டு போட்டிகளிலும் ரிஷப் பண்டுக்கு வாய்ப்பு வழங்கப்பாடதது குறித்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி உரிமையாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. ஐந்து போட்டிகள் டி20 கிரிக்கெட் தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் ரிஷப் பண்ட் சேர்க்கப்படவில்லை. ஓரளவிற்கு அனைத்து வீரர்களுக்கும் ஆடும் லெவன் அணியில் இடம் கிடைத்த நிலையில் இவருக்கு மட்டுமே இடம் கிடைக்கவில்லை.

இந்நிலையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான பார்த் ஜிண்டால் ரிஷப் பண்டுக்கு வாய்ப்பு கிடைக்காதது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘ரிஷப் பண்ட்-ஐ பெஞ்சில் உட்கார வைப்பதற்காக மட்டுமேவா அழைத்துச் சென்றீர்கள்?. நியூசிலாந்து ஏ அல்லது உள்ளூர் போட்டியில் அவர் உண்மையிலேயே தனது திறமையை நிரூபித்திருப்பார்.

அவரைப் போன்ற திறமையான வீரர்கள் ஐந்து டி20 மற்றும் மூன்று 50 ஓவர் போட்டிகளில் விளையாடாமல் இருப்பதை பார்ப்பதில் எந்த அர்த்தமும் இல்லை’’ என்று பதிவிட்டுள்ளார்.

ரிஷப் பண்ட் ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்திய சீனியர் கிரிக்கெட் அணியின் தேர்வு குறித்து ஐபிஎல் அணி உரிமையாளர் கேள்வி எழுப்பியது இதுவே முதல் முறையாகும்.
Tags:    

Similar News