செய்திகள்
மீண்டும் பாகிஸ்தான் மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்: இலங்கை சம்மதம்
பாகிஸ்தான் மண்ணில் இரண்டு பேட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இலங்கை அணி சம்மதம் தெரிவித்துள்ளது.
- 2009-ம் ஆண்டு இலங்கை வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்
- ஐக்கிய அரபு எமிரேட்ஸை சொந்த மைதானங்களாக கொண்டது பாகிஸ்தான்
- சமீபத்தில் இலங்கை அணி ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடியது.
இலங்கை அணி கடந்த 2009-ம் ஆண்டு பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து விளையாடும்போது பயங்கரவாதிகள் இலங்கை வீரர்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தினர். இதில் இலங்கை வீரர்கள் காயம் அடைந்தனர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து உடனடியாக தொடரை ரத்து செய்து இலங்கை அணி சொந்த நாடு திரும்பியது. அதன்பின் எந்தவொரு அணியும் பாகிஸ்தான் சென்று விளையாடவில்லை. இதனால் பாகிஸ்தான் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள மைதானங்களை சொந்த மைதானமாக கொண்டு விளையாடியது.
சொந்த மண்ணில் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு முயற்சி மேற்கொண்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஜிம்பாப்வே அணி பாகிஸ்தான் சென்று டி20 தொடரில் விளையாடியது.
முன்னணி அணிகள் ஏதும் செல்லாத நிலையில் இலங்கை அணி முதன்முறையாக பாகிஸ்தான் சென்று ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடியது.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இரண்டு போட்டிகள் கொண்ட தொடரை பாகிஸ்தான் நடத்த இருந்தது. இதை எப்படியாவது பாகிஸ்தான் மண்ணில் நடத்திவிட எண்ணியது. இதற்கு இலங்கை அணி முதலில் தயங்கியது.
பாகிஸ்தான் அணி தொடர்ந்து வற்புறுத்தவே, இலங்கை அணி தற்போது பாகிஸ்தான் சென்று விளையாட சம்மதம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் 2009-ம் ஆண்டுக்குப்பின் பாகிஸ்தான் மண்ணில் ஐந்து நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டி நடைபெற இருக்கிறது.
முதல் டெஸ்ட் ராவல் பிண்டியில் டிசம்பர் 11-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை நடக்கிறது. 2-வது டெஸ்ட் கராச்சியில் டிசம்பர் 19-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை நடக்கிறது.