செய்திகள்

புனேவில் 300 ரன்களுக்கு மேல் குவிக்கலாம்: ஆடுகள பராமரிப்பாளர் சொல்கிறார்

Published On 2017-01-13 16:02 GMT   |   Update On 2017-01-13 16:02 GMT
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி நடைபெறும் புனேயில் 300 ரன்களுக்கு மேல் குவிக்கலாம் என்ற ஆடுகள தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி புனேயில் நாளைமறுநாள் (15-ந்தேதி) பகல் - இரவு ஆட்டமாக நடக்கிறது. இதே மைதானத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி நடந்தது. இந்த போட்டிக்கான ஆடுகளம் இங்கிலாந்தில் காணப்படும் ஆடுகளங்கள் போல் காணப்பட்டது. அதிக புற்கள் உள்ள ஆடுகளத்தில் பந்து வேகமாகவும், பவுன்சராகவும் சென்றது. இதனால் இந்தியா 101 ரன்னில் சுருண்டது. பின்னர் இலங்கை அணி 5 விக்கெட் இழப்பிற்கு இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

தற்போதும் அதேபோல் ஆடுகளம்தான் கொடுக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், புனே ஆடுகளத்தில் 300 ரன்களுக்கு மேல் குவிக்கலாம் என்று மகாராஷ்டிர கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

ஆடுகளம் குறித்து எம்.சி.ஏ. அதிகாரி ஒருவர் கூறுகையில் ‘‘ஆடுகளம் பார்வையாளர்களுக்கு தகுந்த வகையில் இருக்கும். ஸ்கோர் போர்டில் அதிக ரன்கள் வரவேண்டும் என்ற ரசிகர்களின் விருப்பத்தை நாம் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்’’ என்றார்.

கடந்த வருடம் இலங்கை அணிக்கெதிரான டி20 போட்டிக்கு அமைக்கப்பட்ட ஆடுகளம் போன்று தற்போது இருக்குமா? என்று ஆடுகள பராமரிப்பாளரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பராமரிப்பாளர் பாண்டுரங் கசல்கயோகார் கூறுகையில் ‘‘அப்படி இருக்கப்போவதில்லை. தற்போது நடக்க இருப்பது ஒருநாள் கிரிக்கெட் போட்டி. ஸ்கோர்போர்டில் அதிக ரன்கள் வரவேண்டும் என்று ரசிகர்கள் விரும்புவார்கள். இந்த ஆடுகளத்தில் 300 ரன்கள் எடுக்க முடியும் என்பது என் கணிப்பு. ஆகவே, முதலில் விளையாடும் அணி 300 ரன்களுக்கு மேல் குவித்துவிட்டால், சேஸிங் செய்ய கடினமாக இருக்கும்’’ என்றார்.

Similar News