செய்திகள்

இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து ஜோ ரூட் விலக வாய்ப்பு

Published On 2017-01-01 13:08 GMT   |   Update On 2017-01-01 13:08 GMT
ஜோ ரூட்டின் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதால் இந்தியாவில் நடைபெற உள்ள ஒருநாள் தொடரில் இருந்து அவர் விலக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் சில நாட்களுக்கு முன் சென்னையில் முடிவடைந்தது. அதன்பின் இங்கிலாந்து அணி சொந்த நாடு சென்றது.

பின்னர் மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக வியாழக்கிழமை இங்கிலாந்தில் இருந்து மீண்டும் இந்தியா புறப்படுகிறது. முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி 15-ந்தேதி தொடங்குகிறது.

இதற்கு முன் 10 மற்றும் 12-ந்தேதிகள் இங்கிலாந்து அணி பயிற்சி ஆட்டத்தில் விளையாட இருக்கிறது. இந்த சமயத்தில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரான ஜோ ரூட்டின் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதால் அவருக்கு குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் குழந்தை பிறக்கும் நேரத்தில் மனைவியின் அருகில் இருக்க வேண்டும் என்ற ஜோ ரூட் நினைக்கிறார். இதனால் இந்தியாவிற்கு எதிரான தொடரில் அவர் விளையாட மாட்டார் என்று தெரிகிறது.

இதை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த வருடம் இந்தியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையின்போது தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக 230 ரன்களை இங்கிலாந்து சேஸ் செய்தது. அந்த ஆட்டத்தில் ஜோ ரூட் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

சமீபத்தில் முடிந்த டெஸ்ட் தொடரில் 491 ரன்கள் குவித்தார்.

Similar News